Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தேர்தல் என்பது யுத்தம் அல்ல ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

தேர்தல் என்பது யுத்தம் அல்ல ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

தேர்தல் என்பது யுத்தம் அல்ல ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

தேர்தல் என்பது யுத்தம் அல்ல ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

ADDED : ஜூன் 12, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
நாக்பூர், தேர்தல் முடிவுகள் வெளியாகி மோடி அரசு மீண்டும் பதவி ஏற்ற பின், முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:

கடந்த ஓராண்டாக மணிப்பூர் அமைதியற்று காணப்படுகிறது. 10 ஆண்டுகளாக அமைதியாக இருந்த மாநிலத்தில், திடீரென துப்பாக்கி கலாசாரம் தலைதுாக்கி உள்ளது.

அங்குள்ள மக்கள் உதவி கேட்டு கூக்குரல் இடுகின்றனர். அதை கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு யாருடையது? அரசு இந்த பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. பொருளாதாரம், ராணுவம், கலை, விளையாட்டு, டெக்னாலஜி போன்ற துறைகளில், 10 வருடமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதனால் இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், நாட்டின் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாக நினைத்துவிடக் கூடாது.

எந்த பிரச்னையாக இருந்தாலும் அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுதான் இயற்கை. நான் சொல்வது மட்டுமே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு என்று நினைக்க கூடாது.

என் கருத்தை தவிர வேறு கருத்துக்கு இடமில்லை என நம்பக் கூடாது. பார்லிமென்ட் என்பது அனைத்து தரப்பின் நியாயங்களையும், வாதங்களையும் எடுத்துக் கூற வேண்டிய இடம். எதையும் புறக்கணிக்கவோ, தடுக்கவோ கூடாது.

ஒற்றுமை தேவை

பார்லிமென்டும், தேர்தலும் மாறுபட்ட கருத்துகளை பொது வெளியில் எடுத்து வைத்து, திறந்த மனதுடன் விவாதம் நடத்தி, முடிந்த அளவுக்கு இரு தரப்பும் ஏற்றுக் கொள்கிற வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்கவே அமைக்கப்பட்ட ஏற்பாடுகள்.

ஆனால், தேர்தல் பிரசாரத்தில் இந்த தடவை நாம் பார்த்தது அப்படிப்பட்ட முயற்சிகள் அல்ல. சமூகத்திலும், மக்களின் மனங்களிலும் கடுமையான தாக்கத்தை உண்டாக்கும் வகையில் தரம் தாழ்ந்த பேச்சும் செயலும் வலம் வந்தன.

டெக்னாலஜியை பயன்படுத்தி அப்பட்டமான பொய்களும் அவதுாறுகளும் பரப்பப்பட்டன.

இரு தரப்பிலுமே எல்லைகளை மதிக்காமல் பிரசாரத்தில் தீவிரம் காட்டினர். தேவையில்லாமல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும் வம்புக்கு இழுத்தனர். தேர்தலில் எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் அல்ல.

அவர்கள் வேறொரு கொள்கைக்கு சொந்தக்காரர்கள். அவர்களின் கருத்தும் மதிக்கப்பட வேண்டியது. அதை எதிர் கருத்தாக நீங்கள் பார்க்கலாம். மறு கருத்தாக, மாற்றுக் கருத்தாக நான் மதிக்கிறேன்.

தேர்தல் என்பது யுத்தம் அல்ல. பலத்தை எல்லாம் காட்டி ஆக்ரோஷமாக தேர்தல் களத்தில் செயல்பட வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் பிரசாரத்தில் கண்ணியமும், நாகரிகமும் அவசியம். இந்த தேர்தலில் அவை பின்பற்றப்படவில்லை.

தேர்தல் என்பது குறுகிய கால செயல்பாடு. அது முடிந்ததும், தேசத்தின் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும், அதற்கு எல்லா தரப்பின் ஒத்துழைப்பும் தேவை என்பதையும் மனதில் கொண்டால் எல்லைகளை மீறாமல் பிரசாரம் செய்யலாம்.

அரசியல் மாற்றம்

கண்ணியத்தை கடைபிடிப்பவரே உண்மையான மக்கள் சேவகர். பணியில் அவர் நல்லொழுக்கத்தை பின்பற்றுவார். மக்கள் பணி என்பது பெரும் சேவை. எனவே தான் அந்தப் பணி செய்யும் தலைவனை சேவகன் என்கிறோம்.

பொறுப்புகளை கடமையாக கருதி செய்பவர்கள் மனதில் பெருமை உண்டாகலாம். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டார்கள். மக்களுக்காக நான் அதை செய்தேன், இதை செய்தேன் என உண்மையான சேவகர்கள் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். அவர்களிடம் ஆணவம் இருக்காது.

உலகெங்கிலும் சமூகங்கள் படிப்படியாக மேம்பட்டு வந்துள்ளன. அதற்கேற்ப சமூக அரசியல் கட்டமைப்புகள் மாற்றம் பெற்று வருகின்றன.

டாக்டர் அம்பேத்கர் சொன்னதை போல, எந்த ஒரு முக்கியமான சமூக மாற்றத்துக்கும், ஆன்மிக எழுச்சியும் அவசியமாகிறது. ஆயிரம் ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும், பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட சமூகங்களில் அதிருப்தியும் பிளவுபட்ட சிந்தனைகளும் இருந்தால் அது இயல்பானது என்பதை உணர வேண்டும்.

நான் சொல்வது மட்டுமே உண்மை; அது மட்டுமே செல்லுபடியாகும் என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை. இது, நம் நாட்டுக்கு வெளியே இருந்து இங்கு வந்தவர்களின் கலாசார பின்னணியில் உருவான நம்பிக்கை. நம் கலாசாரத்தில் அப்படி இறுக்கமான கருத்தோட்டம் கிடையாது.

வழிகாட்டும் ரிஷிகள்

எல்லோருடைய எண்ணங்களும், செயல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை நம் ரிஷிகள் வேத காலத்திலேயே உணர்ந்து அங்கீகரித்துள்ளனர். எல்லா விஷயங்களிலும் எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரியான முடிவை எவராலும் முன்வைக்க முடியாது.

எனவேதான் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒரு பொதுவான கருத்தொற்றுமை உருவாக்க அவர்கள் நமக்கு வழிகாட்டினர்.

நம் கொள்கையே சரியானது, மற்றதெல்லாம் தவறானவை; நான் செய்வதே சரி, மற்றவர்கள் செய்வது பிழை என்கிற எண்ணத்தை அடியோடு உதற வேண்டும். தனிப்பட்ட அவரவர் கொள்கைகளை பின்பற்றி நடக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.

யாரும் மதம் மாறவோ, இடம் மாறவோ அவசியம் கிடையாது. நம் நம்பிக்கைகள் மீது நமக்கு பெருமை இருப்பது குற்றமல்ல; மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கத் தவறுவது தான் தவிர்க்க வேண்டிய போக்கு.

இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.

முடிவுகள் உணர்த்துவது என்ன?

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'ஆர்கனைசர்' இதழில், மூத்த உறுப்பினர் ரத்தன் சாரதா எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் செல்வாக்கு என்ற குமிழுக்குள் வசதியாக அமர்ந்து கொண்டு, எப்படியும் 400 இடங்களில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த பா.ஜ., தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு உண்மை நிலவரத்தை உணர்த்தி உள்ளது.பிரதமர் மோடி, 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனக் கூறியது, தங்களுக்கு விதிக்கப்பட்ட இலக்கு என்பதையே அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. களத்தில் இறங்கி கடுமையாக உழைத்தால் மட்டுமே, இலக்கை அடைய முடியும் என்பதை உணரவில்லை. போஸ்டர்கள், செல்பிகளை சமூக வலைதளங்களில் பகிர்வதால் வெற்றி கிடைக்காது. தெருவில் இறங்கி மக்களின் குரலை கேட்க, அவர்கள் தவறிவிட்டனர். மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உடன் பா.ஜ., ஆடிய தேவையற்ற அரசியல் ஆட்டங்கள், அங்கு மிக மோசமான முடிவை தந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்., ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும், மும்பை தாக்குதலை ஆர்.எஸ்.எஸ்., அரங்கேற்றியது என்றும் பேசிய காங்., தலைவர்களை பா.ஜ.,வுக்குள் சேர்த்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1973, 1977க்கு பின் ஆர்.எஸ்.எஸ்., நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை. தேசத்தை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அவ்வளவு தான். நாங்கள் பா.ஜ.,வுக்கான களப்படை அல்ல. அதையும் தாண்டி தேர்தல் பணிகளில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டால், அதை பா.ஜ., தலைவர்கள் தான் கேட்க வேண்டும். இந்த முறை அவர்கள் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. எங்கள் ஒத்துழைப்பு தேவையில்லை என நினைத்திருக்கலாம்.இவ்வாறு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us