தோழியை கொலை செய்து நகையை அபகரித்தவர் கைது
தோழியை கொலை செய்து நகையை அபகரித்தவர் கைது
தோழியை கொலை செய்து நகையை அபகரித்தவர் கைது
ADDED : மார் 14, 2025 06:48 AM

மைசூரு: கொடுத்த கடனை திருப்பி கொடுப்பதற்காக, கடன் கொடுத்த தோழியின் கழுத்தை நெரித்து கொலை செய்து தங்க நகையை அபகரித்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
மைசூரு நகரின், கே.சி., லே - அவுட்டில் வசிக்கும் கங்கண்ணா, போலீஸ் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி சுலோச்சனா, 62. இதே பகுதியில் வசிப்பவர் சகுந்தலா, 42. இவரும், சுலோச்சனாவும் நெருக்கமான தோழிகள்.
சகுந்தலாவின் குடும்பத்தினர் சமையல் வேலை செய்து, வாழ்க்கை நடத்துகின்றனர். பல இடங்களில் கடன் வாங்கினர்.
தன் தோழி சுலோச்சனாவிடமும் 2.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். நீண்ட நாட்களாகியும் பணத்தை திருப்பி தரவில்லை.
மார்ச் 5ம் தேதி, கடனை கேட்பதற்காக சுலோச்சனா, சகுந்தலாவின் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது சுலோச்சனா கழுத்தில் இருந்த தங்க செயினை சகுந்தலா கவனித்தார்.
இதை அபகரித்தால் கடன் பிரச்னை தீரும் என, நினைத்தார். எனவே சுலோச்சனாவை கீழே தள்ளி, அவர் மீது ஏறி அமர்ந்து, கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை எடுத்து வைத்து கொண்டார். அவர் மயங்கி விழுந்துவிட்டதாக, அக்கம், பக்கத்தினரிடம் கூறி நம்ப வைத்தார்.
அவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு சுலோச்சனாவை கொண்டு சென்ற போது, அவர் இறந்து விட்டது தெரிந்தது.
அவரது உடலில் காயங்கள் இருப்பதை கவனித்து சந்தேகமடைந்த குடும்பத்தினர், மைசூரின் நஜர்பாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு சகுந்தலா மீது சந்தேகம் ஏற்பட்டது. பணம் கடன் வாங்கியது; தோழி கழுத்தில் இருந்த திருடிய தங்க செயினை அடமானம் வைத்து 1.5 லட்சம் ரூபாய் பெற்றதும் தெரிய வந்தது.
அதன்பின் சகுந்தலாவிடம் தீவிரமாக விசாரித்த போது, அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை, போலீசார் கைது செய்தனர்.