'அடிப்படை வசதிகள் இல்லாத நர்சிங் கல்லுாரிகளுக்கு பூட்டு'
'அடிப்படை வசதிகள் இல்லாத நர்சிங் கல்லுாரிகளுக்கு பூட்டு'
'அடிப்படை வசதிகள் இல்லாத நர்சிங் கல்லுாரிகளுக்கு பூட்டு'
ADDED : ஜூன் 14, 2024 07:50 AM

பெங்களூரு: ''குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாத நர்சிங் கல்லுாரிகளுக்கு பூட்டு போடுங்கள்,'' என மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் உத்தரவிட்டார்.
பெங்களூரின், விகாஸ் சவுதாவில், நர்சிங் கல்லுாரிகளின் நிர்வாகிகளுடன், அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் நேற்று ஆலோசனை நடத்தினார். அவர் பேசியதாவது:
கர்நாடகாவின் பெரும்பாலான கல்லுாரிகளில், அடிப்படை வசதிகள் இல்லையென, புகார்கள் வந்துள்ளன. எனவே ஆய்வு செய்து, குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் இல்லாத கல்லுாரிகளுக்கு பூட்டு போடுங்கள்.
சில கல்லுாரிகளை தவிர, மற்ற இடங்களில் பேராசிரியர்கள், ஊழியர்கள், ஆய்வகங்கள், நுாலகம் என, தேவையான வசதிகள் இல்லை. இவ்வளவு பிரச்னைகளை வைத்துக்கொண்டு, மாணவர்களுக்கு எப்படி கல்வி அளிப்பர்.
வரும் நாட்களில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், மாணவர்கள் சேர்க்கையை துவக்கும் முன், அதிகாரிகள் நேரில் சென்று, ஆய்வு செய்ய ஏண்டும். அரசின் விதிமுறைப்படி அடிப்படை வசதிகள் செய்யாத கல்லுாரிகளை மூடுங்கள்.
இத்தகைய கல்லுாரிகள் மீது, தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள்.
எந்த காரணத்தைக் கொண்டும், ஆண்டு கல்வி கட்டணம் அதிகரிக்கப்படாது. அரசு கோட்டாவில் 'சீட்' பெறும் மாணவர்கள், ஆண்டுக்கு 10,000 ரூபாய்; நிர்வாக கோட்டாவில் சீட் பெறும் மாணவர்கள் ஒரு லட்சம் ரூபாய்; வேறு மாநிலத்தின் மாணவர்களுக்கு 1.40 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் கட்டணத்தை உயர்த்தும், தனியார் கல்லுாரிகளின் வேண்டுகோளை ஏற்க முடியாது. நாங்கள் மாணவர்களுக்கு ஆதரவாக நிற்போம்.
அரசு கோட்டாவின், நர்சிங் சீட்களின் அளவை 40 சதவீதத்தை நிர்வாகங்கள் விட்டுத்தர வேண்டும். தற்போது 611 நர்சிங் கல்லுாரிகள் சார்பில், 35,000 சீட்கள் நிரப்பப்படுகின்றன. 20 சதவீதம் அரசு, 80 சதவீதம் நிர்வாக கோட்டாவாகும். 40 சதவீதம் சீட்களை அரசு கோட்டாவுக்கு விட்டு கொடுத்தால், ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
நர்சிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை செப்டம்பர் முதல், அக்டோபர் வரை நடத்தாமல், இதே கல்வியாண்டின் ஜூலை முதல் நடத்த ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.