சட்ட மேலவை தேர்தல்: விறுவிறு ஓட்டுப்பதிவு
சட்ட மேலவை தேர்தல்: விறுவிறு ஓட்டுப்பதிவு
சட்ட மேலவை தேர்தல்: விறுவிறு ஓட்டுப்பதிவு
ADDED : ஜூன் 04, 2024 04:59 AM

பெங்களூரு, : கர்நாடக சட்ட மேலவையின், ஆசிரியர், பட்டதாரி என ஆறு தொகுதிகளுக்கு நேற்று அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது;
கர்நாடக மேலவையின் வட கிழக்கு பட்டதாரி தொகுதி காங்கிரஸ் - எம்.எல்.சி., சந்திரசேகர் பாட்டீல்; பெங்களூரு பட்டதாரி தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி., ஏ.தேவகவுடா; கர்நாடக தென் கிழக்கு ஆசிரியர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி., ஒய்.ஏ.நாராயணசாமி; கர்நாடக தென் மேற்கு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - எம்.ல்.சி., போஜேகவுடா ஆகியோரது பதவிக் காலம் ஜூன் 21ம் தேதி நிறைவு பெறுகிறது.
மேலும், கர்நாடக தென் மேற்கு பட்டதாரி தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்த ஆயனுார் மஞ்சுநாத், 2023 ஏப்ரல் 19ம் தேதியும்; கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.சி.,யாக இருந்த மரிதிப்பேகவுடா, 2024 மார்ச் 21ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தனர்.
78 வேட்பாளர்கள்
இந்த ஆறு தொகுதிகளுக்கு, காங்கிரஸ் 6 வேட்பாளர்களையும், பா.ஜ., 4 வேட்பாளர்களையும், ம.ஜ.த., 2 வேட்பாளர்களையும் களமிறக்கியது. சுயேச்சைகள் உட்பட 78 வேட்பாளர்கள் இறுதி களத்தில் உள்ளனர்.
ஆசிரியர், பட்டதாரி என 4.33 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போட தகுதி பெற்றிருந்தனர். 631 ஓட்டுச்சாவடிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
காலை 8:00 மணிக்கு துவங்கி, மாலை 4:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது.
ஒரு சில பிரச்னைகள் தவிர, அமைதி முறையில் நடந்தது. ஓட்டுச்சாவடிகளுக்கு வெளியே 100 மீட்டர் தொலைவுக்கு பின், அரசியல் கட்சியினர் கூடாரம் அமைத்து வாக்காளர்களிடம் பிரசாரம் செய்தனர்.
பேனாவுக்கு தடை
ஓட்டுச்சாவடி வளாகத்துக்குள் சென்றவுடன், வாக்காளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பேனா, பை, மொபைல் போன், ஸ்மார்ட் கை கடிகாரம் என டிஜிட்டல் உபகரணங்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஒரு இடத்தில் வைக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர். அதன்பின், வரிசையில் நின்ற வாக்காளர்களை, அடையாள அட்டையுடன் மட்டுமே உள்ளே அனுப்பினர். உள்ளே சென்றதும், ஒரு அதிகாரி, பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து, வரிசை எண்ணை சத்தமாக சொன்னார்.
அதை அரசியல் கட்சியினரின் ஏஜென்ட்கள், பதிவு செய்து கொண்டனர். பின், அருகில் உள்ள மற்றொரு அதிகாரி, வாக்காளரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு, இடது ஆள் காட்டி விரலில் அழியா மை வைத்தார். அதன்பின், இளஞ்சிவப்பு ஓட்டு சீட்டு வாக்காளரிடம் வழங்கப்பட்டது.
6ல் ஓட்டு எண்ணிக்கை
அதை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று, ஏற்கனவே அங்கிருக்கும் பேனாவால், வாக்காளர் பெயர் முன்னால், குறிப்பிட வேண்டும். பின், நான்காக மடித்து, ஓட்டுப் பெட்டியில் போடப்பட்டது. அதன் பின், வாக்காளர்கள் வெளியே வந்தனர்.
பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், எழுத்து பிழை இருந்ததால், சிலரை ஓட்டு போட அனுமதிக்கவில்லை.
உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னரே அவர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.
மொத்தம் 60 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. வரும் 6ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.