Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 5 தொகுதி வெற்றிக்கு காரணமான கார்கேவின் உருக்கமான பேச்சு

5 தொகுதி வெற்றிக்கு காரணமான கார்கேவின் உருக்கமான பேச்சு

5 தொகுதி வெற்றிக்கு காரணமான கார்கேவின் உருக்கமான பேச்சு

5 தொகுதி வெற்றிக்கு காரணமான கார்கேவின் உருக்கமான பேச்சு

ADDED : ஜூன் 05, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கல்யாண கர்நாடகாவில் உள்ள மொத்தம் ஐந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின், உணர்வு பூர்வமான பேச்சு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இதில், பீதர், ராய்ச்சூர், கொப்பால், கலபுரகி, பல்லாரி ஆகிய ஐந்து தொகுதிகள், கல்யாண கர்நாடகா மண்டலத்துக்கு உட்பட்டவை. இந்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த போது, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் காரணம் என்று கூறப்படுகிறது. இத்துடன், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒரு வார்த்தை மிகவும் முக்கியமாக அமைந்தது என்று தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் கலபுரகியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, கார்கே பேசியதாவது:

கடந்த தேர்தலில் என்னை தோற்கடித்தீர்கள். கலபுரகி வளர்ச்சிக்காகவும், மாநில மக்கள் நலனுக்காகவும் உழைத்தேன். ஆனால், எனக்கு ஓட்டு போடவில்லை. இந்த முறையாவது போடுவீர்களா. நீங்கள் ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை.

நான் இறந்த பின், என் இறுதி சடங்கிற்காவது வாருங்கள். மண்ணில் புதைத்தால், ஒரு கை பிடி மண்ணை அள்ளி என் உடல் மீது போடுங்கள். என் உடலை எரித்தால், மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்துங்கள்.

இவ்வாறு உருக்கமாக பேசி இருந்தார்.

கார்கேவின் இந்த உணர்வு பூர்வமான பேச்சு அடங்கிய வீடியோ, தேர்தல் நடந்த மே 7ம் தேதிக்கு முந்தைய நாள், கல்யாண கர்நாடகா மண்டல மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு, 'வாட்ஸாப்'பில் பரவ செய்துள்ளனர்.

மேலும், டெலிகிராம், முகநுால், எக்ஸ், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் பரவ செய்தனர். இந்த வீடியோவை பார்த்த பலரும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டுள்ளதாக ஒரு அரசியல் விமர்சகர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us