மகிழ்ச்சியான தருணங்களுக்கும் இனி 'பரோல்' உண்டு
மகிழ்ச்சியான தருணங்களுக்கும் இனி 'பரோல்' உண்டு
மகிழ்ச்சியான தருணங்களுக்கும் இனி 'பரோல்' உண்டு
ADDED : ஜூலை 13, 2024 11:07 PM

மும்பை: 'துக்க நிகழ்ச்சிக்கு பரோல் வழங்கப்படும் போது, மகிழ்ச்சியான தருணத்துக்கும் வழங்கப்பட வேண்டும்' என கருத்து தெரிவித்த மும்பை உயர் நீதிமன்றம், மேற்படிப்புக்காக, ஆஸ்திரேலியா செல்லும் தன் மகனை வழியனுப்ப பரோல் கேட்டு விண்ணப்பித்த நபருக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவில், 2012ல் நடந்த கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு, 2018 முதல், விவேக் ஸ்ரீவஸ்தவ் என்பவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவரது மகன், மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்கிறார்.
இதையடுத்து, மகனின் கல்விச் செலவுக்கு பணத்தை ஏற்பாடு செய்யவும், அவரை வழியனுப்பவும் பரோல் கேட்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில், விவேக் ஸ்ரீவஸ்தவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதி டாங்ரே, மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே பரோல் வழங்கப்படுவது வழக்கம் எனக் கூறி, இதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், அமர்வு கூறியதாவது:
துக்கம் என்பது ஓர் உணர்ச்சி. அதே போல், மகிழ்ச்சி என்பதும் உணர்ச்சியே. துக்கத்தை பகிர்ந்து கொள்ள பரோல் வழங்கப்படுகிற நிலையில், மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொள்ள, பரோல் ஏன் வழங்கப்படக் கூடாது?
மனுதாரரின் மகன், மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்கிறார்.
அதற்கான பணத்தை ஏற்பாடு செய்வது, தந்தை என்ற முறையில் மனுதாரரின் கடமை. இதை அவர் செய்யத் தவறினால், அவரது மகனின் வாய்ப்பு பறிபோகும்.
பெருமைப்படக் கூடிய இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தன் மகனுடன் மனுதாரர் இருப்பது அவசியம். எனவே, மனுதாரருக்கு 10 நாட்கள் பரோல் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அமர்வு கூறியது.