குஜராத் பாரம்பரிய முறையில் நீடா அம்பானி ஏந்தி வந்த விளக்கு
குஜராத் பாரம்பரிய முறையில் நீடா அம்பானி ஏந்தி வந்த விளக்கு
குஜராத் பாரம்பரிய முறையில் நீடா அம்பானி ஏந்தி வந்த விளக்கு
ADDED : ஜூலை 13, 2024 11:54 PM

மும்பை: தன் மகன் திருமணத்தின்போது, பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி ஏந்தி வந்த விளக்கு, பேசும் பொருளாகி உள்ளது. குஜராத்தின் பாரம்பரியப்படி, அவர் இந்த விளக்கை ஏந்தி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் மிகப்பெரும் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் அனந்த் - ராதிகா மெர்ச்சென்ட் திருமண விழா மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டது.
இந்த நுாற்றாண்டின் திருமணம் என்று கூறும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாகவும், விரிவாகவும், நீண்ட நாட்களுக்கு இந்தத் திருமண விழா நடத்தப்பட்டது.
மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட திருமண மேடைகள், ஆடம்பரமான ஆடை, அணிகலன்கள், பலதுறை பிரபலங்கள் பங்கேற்பு என, திருமண விழா களைகட்டியது.
முகூர்த்தத்துக்கு முன், மணமகனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது, நீடா அம்பானி கையில் ஒரு விளக்கு வைத்திருந்தார். விநாயகர் சிலையுடன் கூடிய அந்த விளக்கு பலரின் கவனத்தை ஈர்த்தது.
குஜராத்தில் திருமண விழாவின்போது, மணமகனின் தாய், இதுபோன்ற விளக்கை கையில் ஏந்தி வருவார்.
'ராமன் தியோ' என்றழைக்கப்படும் இந்த விளக்கு, இருளை அகற்றி, மணமக்களின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றுவதற்காக மணமகனின் தாய் ஏந்தி வருவது பாரம்பரியம்.
இதன்படி, பித்தளையில் செய்யப்பட்ட விளக்கும், அதன் மீது, தங்கத்தில் விநாயகர் சிலையும் வைக்கப்படும். இது பின்னர் பூஜை, தீபாவளி பண்டிகை போன்றவற்றின்போது பயன்படுத்தப்படும்.