வெடிகுண்டு என நினைத்து வீசிய குடம்: உடைந்து சிதறிய தங்கம்
வெடிகுண்டு என நினைத்து வீசிய குடம்: உடைந்து சிதறிய தங்கம்
வெடிகுண்டு என நினைத்து வீசிய குடம்: உடைந்து சிதறிய தங்கம்
ADDED : ஜூலை 14, 2024 12:18 AM

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணுார் அருகே மண்ணைத் தோண்டிய போது கிடைத்த குடத்தை, வெடிகுண்டு என்று நினைத்து வீசியதில் தங்கம், வெள்ளிப் பொருட்கள் சிதறின.
கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகம் உள்ளது.
அரசியல் மோதல்களில் வெடிகுண்டுகள் இங்கு சகஜமாக வீசப்படும். சமீபத்தில் வானுார் என்ற இடத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் போது, மார்க்சிஸ்ட் தொண்டர் பலியானார்.
சிலநாட்களுக்கு முன் வானுாரில் கீழே கிடந்த ஒரு தேங்காயை எடுத்த முதியவர், குண்டு வெடித்து இறந்தார். இதனால் கண்ணுாரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஏதாவது பொருள் கிடைத்தால் அதன் அருகில் யாரும் செல்வதில்லை. இந்நிலையில், கண்ணுர் அருகே செங்கலாயி பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழில் உறுதி திட்டத்தில் பணியாற்றும் பெண்கள், மழை நீரை தேக்குவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பழங்காலக் குடம் கிடைத்தது. அதை பார்த்த பெண்கள், வெடிகுண்டாக இருக்கும் எனக்கருதி ஓட்டம் பிடித்தனர்.
அதில் ஒரு தொழிலாளி தைரியமாக அந்த குடத்தை துாக்கி எறிந்தார். குடம் உடைந்து தங்க பதக்கங்கள், முத்துமணி, கம்மல், வெள்ளி நாணயங்கள் சிதறின.
இதைத்தொடர்ந்து செங்கலாயி பஞ்சாயத்து அதிகாரிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த பொருட்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதை ஆய்வு செய்ய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.