Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கடவுள் கூட முதல்வருக்கு நல்லது செய்ய மாட்டார்! சித்தராமையாவுக்கு விஜயேந்திரா 'சாபம்'

கடவுள் கூட முதல்வருக்கு நல்லது செய்ய மாட்டார்! சித்தராமையாவுக்கு விஜயேந்திரா 'சாபம்'

கடவுள் கூட முதல்வருக்கு நல்லது செய்ய மாட்டார்! சித்தராமையாவுக்கு விஜயேந்திரா 'சாபம்'

கடவுள் கூட முதல்வருக்கு நல்லது செய்ய மாட்டார்! சித்தராமையாவுக்கு விஜயேந்திரா 'சாபம்'

ADDED : ஜூலை 21, 2024 07:26 AM


Google News
பல்லாரி: ''கடவுள் கூட முதல்வருக்கு நல்லது செய்ய மாட்டார். அவர் பாவங்களுக்கு மேல் பாவம் செய்து வருகிறார்,'' என, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா விமர்சித்தார்.

பல்லாரி சண்டூரில் நேற்று நடந்த பா.ஜ., கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:

பழங்குடியினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, அரசில் இருப்போர் கொள்ளை அடித்துள்ளனர். முறைகேடு செய்த பணத்தில் மதுபானங்கள், கார்கள் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

பெரிய அநியாயம்


வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டிற்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.

ஆனால் சட்டசபை கூட்டத்தின்போது முறைகேடு நடந்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். அதிகாரிகள் மீது தவறு இருப்பதாக கூறுகிறார். அதிகாரிகள் தவறு செய்தாலும் அதற்கு முதல்வரே பொறுப்பு. முதல்வர் பொறுப்பின்மையால் முறைகேடு நடந்திருக்க வேண்டும்.

இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடந்தாலும், பா.ஜ., ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்கப் போவதாகக் கூறி, மக்களின் கவனத்தை முதல்வர் திசை திருப்புகிறார். அவர் பாவங்களுக்கு மேல் பாவம் செய்து வருகிறார்.

மாநில மக்கள், காங்கிரசை நம்பி 135 எம்.எல்.ஏ.,க்களை வெற்றி பெற வைத்தனர். ஆனால், மக்களுக்கு, காங்கிரஸ் அரசு அநீதி இழைத்துவிட்டது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த, 14 மாதங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. மைசூரில் நடந்த 'மூடா' ஊழலை அம்பலப்படுத்திய, தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.

எஸ்.சி., -- எஸ்.டி., சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்ற அரசு பயன்படுத்துகிறது. இது அந்த சமூக மக்களுக்கு செய்யும் பெரிய அநியாயம்.

விவசாயிகள் கண்ணீர்


தாழ்த்தப்பட்ட மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள், ஆட்சியில் இருக்கவே கூடாது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நாகேந்திரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, அமலாக்கத்துறையை பா.ஜ.,வின் ஏஜென்ட் என்று, காங்கிரஸ் அமைச்சர்கள் விமர்சித்தனர்.

முறைகேடு குறித்து, நாங்கள் சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்ல முடியாமல் முதல்வர் தயங்கினார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் பேசவில்லை.

மாநிலத்தில் நடக்கும் அரசு மக்களுக்கு எதிராக உள்ளது. ஏழைகள், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

கடவுள் கூட முதல்வருக்கு நல்லது செய்ய மாட்டார். நீங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us