கள்ளநோட்டு அச்சிடும் நக்சல்கள்; போலீஸ் சோதனையில் அம்பலம்
கள்ளநோட்டு அச்சிடும் நக்சல்கள்; போலீஸ் சோதனையில் அம்பலம்
கள்ளநோட்டு அச்சிடும் நக்சல்கள்; போலீஸ் சோதனையில் அம்பலம்
ADDED : ஜூன் 24, 2024 03:28 AM

போபால் : சத்தீஸ்கரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய நக்சல் தேடுதல் வேட்டையின் போது, வனப் பகுதிக்குள் கள்ளநோட்டுகள் மற்றும் அதை அச்சிடும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் முகாம்கள் அதிகம் உள்ளன. இங்கு உள்ள கோராஜ்குடா வனப் பகுதியில் அவர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுக்மா மாவட்ட போலீசார், மாவட்ட பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கூட்டாக இணைந்து நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த நக்சல்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அங்கு போலீசார் சோதனை நடத்திய போது 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் என அனைத்து வகையிலும் கள்ளநோட்டுகளை அச்சிட்டு வைத்திருந்தது தெரிந்தது. கள்ளநோட்டுகளை அச்சிடும் இயந்திரம், மை, காகிதங்கள் மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.
இது குறித்து சுக்மா மாவட்ட எஸ்.பி., கிரண் சாவன் கூறியதாவது: நக்சல்கள் செயல்பாட்டை முடக்கும் வகையில் அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ரோந்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நக்சல்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது கள்ளநோட்டு தயாரிப்பில் இறங்கி உள்ளனர்.
இதை கிராமங்களில் நடக்கும் வாரச் சந்தையில் புழக்கத்தில் விடுவர். எனவே, கிராம மக்களிடம் அனைத்து ரூபாய் நோட்டு களையும் பரிசோதித்து வாங்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.