சரண் பம்ப்வெல் மீது வழக்கு காங்., அரசு மீது பா.ஜ., கோபம்
சரண் பம்ப்வெல் மீது வழக்கு காங்., அரசு மீது பா.ஜ., கோபம்
சரண் பம்ப்வெல் மீது வழக்கு காங்., அரசு மீது பா.ஜ., கோபம்
ADDED : ஜூன் 02, 2024 09:33 PM

மங்களூரூ: விஸ்வ ஹிந்து பரிஷத் இணை செயலர் சரண் பம்ப்வெல் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ., கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
தட்சிண கன்னடா எம்.பி., நளின்குமார் கட்டீல், மங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
மங்களூரில் சாலையை மறித்து தொழுகை நடத்தியவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுவோ மோட்டோ வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டரை, கட்டாய விடுப்பு கொடுத்து, அரசு வீட்டிற்கு அனுப்பியது.
சாலையில் தொழுகை செய்ததால், யாருக்கும் பிரச்னை ஏற்படவில்லை என்று, நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சாலையில் தொழுகை நடத்தியது பற்றி கேள்வி எழுப்பிய, விஸ்வ ஹிந்து பரிஷத் இணை செயலர் சரண் பம்ப்வெல் மீது, வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது. அவர் மீதான வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும்.
இல்லா விட்டால் நாங்கள் போராடுவோம். அரசின் ஹிந்து விரோத செயல்பாட்டிற்கு, சரண் பம்ப்வெல் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது எடுத்துக்காட்டு.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், கர்நாடகா குண்டர் மாநிலம் ஆகிவிட்டது. மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை உள்ளது. பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது.
விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினாலும், இந்த அரசு கண்டுகொள்ளாது. எனது எம்.பி., பதவி காலம் இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து விடும். அதன் பின்னர் கட்சியின் சாதாரண தொண்டனாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.