லோக்சபாவில் பா.ஜ., - எம்.பி., பேச்சு வால்மீகி ஆணைய முறைகேடு
லோக்சபாவில் பா.ஜ., - எம்.பி., பேச்சு வால்மீகி ஆணைய முறைகேடு
லோக்சபாவில் பா.ஜ., - எம்.பி., பேச்சு வால்மீகி ஆணைய முறைகேடு
ADDED : ஜூலை 23, 2024 06:10 AM

''கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்துள்ள, 187 கோடி ரூபாய் முறைகேட்டை, மத்திய அரசு தீவிரமாக கருத வேண்டும். சரியான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என, லோக்சபாவில் உத்தரகன்னடா பா.ஜ., - எம்.பி., விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி வலியுறுத்தினார்.
லோக்சபா பூஜ்ய நேரத்தில், கன்னடத்தில் நேற்று அவர் கூறியதாவது:
பல்வேறு துறைகளில் கர்நாடகா சிறப்பான சாதனைகள் செய்துள்ளது. குறிப்பாக ஐ.டி., - பி.டி., துறையில் உலகின் கவனத்தை, கர்நாடகா தன் வசம் திருப்பியுள்ளது. தற்போது மாநில அரசில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகளை அலட்சியம் செய்துள்ளது.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஆணையத்தின் கருவூலத்தில் இருந்த பணம், சட்டவிரோதமாக வேறு கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மக்களின் வரிப்பணம்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் பணம், அதே சமுதாயத்தினர் நலனுக்காக பயன்படுத்தியிருக்க வேண்டும். மாறாக பினாமி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து, தவறாக பயன்படுத்தினர். இதற்கு அரசும் ஒத்துழைப்பு தந்துள்ளது. முதல்வரிடமே நிதித்துறை உள்ளது. அரசு இயந்திரம் தவறாக பயன்படாமல், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்துள்ள, 187 கோடி ரூபாய் முறைகேட்டை, மத்திய அரசு தீவிரமாக கருத வேண்டும். சரியான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -