மணிப்பூர் முதல்வரின் வாகனம் மீது தாக்குதல்
மணிப்பூர் முதல்வரின் வாகனம் மீது தாக்குதல்
மணிப்பூர் முதல்வரின் வாகனம் மீது தாக்குதல்
UPDATED : பிப் 12, 2025 03:41 PM
ADDED : ஜூன் 10, 2024 11:24 PM

இம்பால்,: மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது, வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக முதல்வர் பைரேன் சிங் உயிர் தப்பினார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியாகினர்.
இந்த பிரச்னை தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு கலவரங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அசாம் மாநில எல்லையில் உள்ள ஜரிபம் என்ற பகுதியில் மெய்டி சமூகத்தைச் சேர்ந்த சோபிபம் சரத்குமார் சிங் என்ற விவசாயி, சமீபத்தில் மாயமானார். இதற்கிடையே கடந்த 6ம் தேதி அவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள இரண்டு போலீஸ் ஸ்டேஷன்கள், வனச்சரக அலுவலகம் உள்ளிட்டவற்றை ஆயுத குழுவினர் அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கள நிலவரங்களை ஆய்வு செய்ய முதல்வர் பைரேன் சிங், நேற்று பாதுகாப்புப் படையினருடன் ஜரிபம் பகுதிக்கு சென்றார். அவர் செல்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக, அவரது பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. கோட்லென் என்ற கிராமத்தின் அருகே சென்றபோது, முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது, வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
குறிப்பாக, முதல்வரின் கான்வாய் வாகனங்களை குறிவைத்து ஊடுருவல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும், அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, முதல்வர் பைரேன் சிங் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.