கொரகஜ்ஜாவுக்கு மது, பீடி, முறுக்கு காணிக்கை
கொரகஜ்ஜாவுக்கு மது, பீடி, முறுக்கு காணிக்கை
கொரகஜ்ஜாவுக்கு மது, பீடி, முறுக்கு காணிக்கை
ADDED : ஜூன் 18, 2024 06:22 AM

தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய கடலோர மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் துளு மொழி அதிகமாக பேசுபவர்கள். இங்கு காலம் காலமாக வினோதமான முறையில் கடவுள் வழிபாடுகள் நடக்கின்றன.
கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட இப்பகுதியில், நவீன உலகிலும் பாரம்பரியம், கலாசாரத்தை இன்றளவும் மறக்காமல் கடைபிடிக்கின்றனர். அதுவும் துளு மொழி பேசும் மக்கள், சுவாமி கொரகஜ்ஜா, குலிகா, பஞ்ஜுர்லி ஆகிய தெய்வங்களை அதிகமாக வழிபடுகின்றனர்.
இதில், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில் உள்ள குத்துார் அருகில், சுவாமி கொரகஜ்ஜாவின் ஆதிஸ்தலம் அமைந்துள்ளது.
குத்தாரு, சோமேஸ்வரம், போல்யா, மித்த ஆகெலா, உஜிலா, தலா, தேரலகட்டே என கொரகஜ்ஜாவின் ஏழு சன்னிதானங்களில், இந்த சன்னிதானத்துக்கு தனி சிறப்பு உண்டு. ஏழு சன்னிதியிலும், தீபாராதனை காட்டப்படாது. ஊதுபத்தி ஏற்றப்படாது. அர்ச்சகர் கிடையாது.
தீர்த்தம், பிரசாதம் வழங்கப்படாது. 24 மணி நேரம் திறந்திருந்தாலும், காலை 6:30 மணி முதல், மாலை 6:30 மணி வரை மட்டுமே பெண் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி, சுவாமிக்கு, மது பாட்டில்கள், தென்னங்கள், வெற்றிலை, பீடி, முறுக்கு, மலர்கள், காணிக்கையாக தாங்களே செலுத்தலாம். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முறுக்கை, பிரசாதமாக யார் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.
மது பாட்டில் காணிக்கை செலுத்தும் பலருக்கும், தீராத நோய்களும், கஷ்டங்களும் நீங்குவதாக அப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை. பயபக்தியுடன் கும்பிட்டால், காணாமல் போன பொருட்களும் திரும்ப கிடைக்கும். மார்ச் மாதத்தில் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
கர்நாடகா மட்டுமின்றி, கேரளா, மஹாராஷ்டிராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். வாரத்தின் ஏழு நாட்களுக்கு இங்கு பக்தர்கள் வந்து கொண்டே இருப்பர். காந்தாரா திரைப்படத்தில் சுவாமி கொரகஜ்ஜா இடம் பெற்ற பின், பக்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கி உள்ளது.
மங்களூரில் இருந்து சொந்த வாகனத்திலும் செல்லலாம். அரசு, தனியார் பஸ்சிலும், குத்துார் சதுக்கத்திற்கு நேரடி சேவை உள்ளது. ஒரு நபருக்கு 20 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.