3,000 ஏக்கர் கழிவு மண்ணில் 'உறங்கும் தங்கம்'
3,000 ஏக்கர் கழிவு மண்ணில் 'உறங்கும் தங்கம்'
3,000 ஏக்கர் கழிவு மண்ணில் 'உறங்கும் தங்கம்'
ADDED : ஜூன் 18, 2024 06:23 AM

பெங்களூரில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள தங்கவயலின் தங்கச் சுரங்கத்தில், 1880ம் ஆண்டில் தங்கம் எடுக்கும் பணிகள் துவங்கப்பட்டன. இப்பணியின் போது, பாதாள சுரங்கத்தில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பர். தகர்க்கப்பட்ட பாறைகள், பூமியின் மேல் பகுதியில் கொண்டு வரப்படும்.
இவற்றை துாளாக்க, அதற்குரிய மில்லுக்கு அனுப்பப்படும். தங்கம் தனியாக பிரித்தெடுக்கப்படும். மீதமான கழிவு மண்ணை குறிப்பிட்ட பகுதியில் கொட்டி விடுவர். இதுபோன்று 111 ஆண்டுகள் நடந்தன.
தங்கத்தை பிரித்தெடுத்த பின், கிடைத்த கழிவு மண் பாலக்காடு, நந்திதுருகம், உரிகம், சாம்பியன், மாரிகுப்பம் சுரங்கப் பகுதிகளில் 13 இடங்களில், மலை போல் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. இதில் கருப்பு கற்கள் தனியாக பிரித்து, கொட்டப்பட்டு உள்ளன.
அந்த காலத்தில் துல்லியமாக தங்கத்தை பிரித்தெடுக்கும் வசதி இல்லாததால், கொட்டப்பட்ட கழிவு மண்ணில், ஓரளவு தங்கம் கலந்து உள்ளது என்பதை, பல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அரசுக்கு அறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த சயனைட் மண் மலை, 3,000 ஏக்கரில் காணப்படுகிறது.
------------
* குறைந்தது உற்பத்தி
தங்கச் சுரங்கம் இழப்பில் இயங்குவதாக, 1972ன் தங்கச் சுரங்க ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது. உற்பத்தியை காட்டிலும், செலவு அதிகமாக இருப்பதால் தங்க சுரங்கத்தை மூடுவது குறித்து பேச ஆரம்பித்தனர்.
தங்கச் சுரங்க சயனைட் மலை மண்ணை சுத்திகரிப்பு செய்தால், தங்கம் உற்பத்தியில் லாபம் அடையலாம். மேலும் ஷீலைட், கெலாடியம், டங்ஸ்டன் ஆகிய உலோகங்கள் இருப்பதால், அதனையும் உற்பத்தி செய்யலாம் என 1985ல் அறிவித்தனர்.
இதற்காக, கிருஷ்ணாபுரம் அருகே ஷீலைட் உற்பத்தி நிலையம் அமைத்தனர். வாக்கர் ஷாப்ட் சுரங்கம் அருகில் இருந்த சிறிய சயனைட் மண் பகுதியில் மூன்று ஆண்டுகள் ஷீலைட் உற்பத்தி செய்தனர். பின், அதையும் கைவிட்டனர்.
கடந்த 1972 முதல் தொடர்ந்து, இழப்பில் இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தை, 2001 மார்ச் 1ல் மத்திய அரசு மூடியது. இதனால் தங்கவயலில் தங்கம் உற்பத்தி செய்யும் பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது.
-------------
* மண் சுத்திகரிப்பு பரிசோதனைகள்
சயனைட் மண்ணில் தங்கம் இருப்பதை உறுதி செய்யும் வகையில், 1995ல் பல ஆராய்ச்சியாளர்கள் 'லேப்' மூலம் சோதனை செய்தனர். ஒரு டன் மண்ணை சுத்திகரித்தால், 0.8 கிராம் தங்கம் கிடைக்கும் என்றும், மற்றொரு அறிக்கையில் ஒரு டன் மண்ணில் 0.5 கிராம் தங்கம் கிடைக்கும் என்றும், இன்னொரு அறிக்கையில் 0.38 கிராம் தங்கம் மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் ஆயிரம் தொழிலாளர்களை வைத்து பணியை துவக்கினால், ஐந்தாறு ஆண்டுகள் வரை இப்பணிகள் நடக்கும் எனவும் கருத்து கூறப்பட்டது. இதை மத்திய சுரங்கத் துறை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால், இன்னும் முடிவு கிடைக்கவில்லை.
---------------
* ஷூட்டிங் ஸ்பாட்
சயனைட் மலைப்பகுதி, தற்போது சினிமா சூட்டிங்கிற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது. இதுவரை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது.
--------------
* பொறுப்பேற்க மறுப்பு
நிலக்கரி சுரங்கம் தவிர மற்ற அனைத்து கனிம சுரங்கங்களை, அந்தந்த மாநிலத்திடம் ஒப்படைக்கலாம் என 10 ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு முடிவெடுத்தது.
இதன்படி தங்கவயலில் உள்ள பி.ஜி.எம்.எல்., என்ற பாரத தங்கச் சுரங்கத்தை கர்நாடக அரசிடம் ஒப்படைக்க முன்வந்தது. கர்நாடக அரசின் ஒப்புதலை கேட்டது. அப்போது முதல்வராக இருந்த சித்தராமையா, 'தங்கச்சுரங்கம் மீதுள்ள கடன் தொகை 1,200 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தால் அதனை ஏற்போம்' என்றார். இதன்பின்னர், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
---------------
* 100 ஆண்டு குத்தகை நிலம்
தங்கச் சுரங்கத்தை புனரமைத்து, தங்கச் சுரங்க தொழில் நடத்த வாய்ப்பே இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது. தனியார் கூட்டு முயற்சியில், தங்கச்சுரங்க தொழிலை நடத்த வேண்டுமானால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 'குளோபல் டெண்டர்' விட வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசு தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை.
தங்கச் சுரங்கம் உள்ள 12,000 ஏக்கர் நிலம், கர்நாடக அரசிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெறப்பட்டது. குத்தகை காலமும் முடிவடைந்துள்ளது. ஆனால், நிலத்தை ஒப்படைக்கும் பணிகள் இன்னும் துவங்கவில்லை.
இப்படி ஒப்படைக்கும் பட்சத்தில் சயனைட் மலையும், மாநில அரசு கைக்கு வந்து விடும். இதில் கிடைக்கும் தங்கம் உட்பட கனிமங்களை எடுக்க வேண்டும். நிறைய தொழில்நுட்ப பிரச்னை காரணமாக அமைச்சரவையில் விவாதிக்க மாநில அரசு திட்டமிட்டது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் முடிவெடுக்காமல் ஒத்தி வைத்து உள்ளனர்.
***
* 5,11,23,615 டன் பாறை கற்கள்
தங்கவயலில் பூமிக்கு அடியில், பாறைகளை உடைத்தெடுத்து, 5 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரத்து 615 டன் கற்களை அரைத்தெடுக்க, மில்லுக்கு அனுப்பப்பட்டது. இதில் கழிவான மண்ணை 3,000 ஏக்கரில் மலையாக கொட்டி வைத்துள்ளனர்.
தங்கச் சுரங்கம் ஆரம்பித்தது முதல் மூடிய காலம் வரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கம் அடங்கிய பாறைகள் விபரம், டன் கணக்கில் மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஆண்டு டன்
1880 - 3,36,072
1881 -- 1890 வரை 1,57,831
1891- - 1900 வரை 21,34,730
1901 -- 1910 வரை 60,90,185
1911 -- 1920 வரை 68,97,003
1921 -- 1930 வரை 59,49,093
1931 -- 1940 வரை 64,40,367
1941 -- 1950 வரை 50,95,750
1951 -- 1960 வரை 52,88,643
1961 -- 1970 வரை 45,40,668
1971 -- 1980 வரை 36,21,531
1981 -- 1990 வரை 27,67,136
1991 -- 2000 வரை 18,04,606
மொத்தம் 5,11,23,615 டன்
__________________-
--உற்பத்தியான தங்கத்தின் விபரம் - கிலோ கணக்கில்
ஆண்டு கிலோ
1880 ல் 6,221
1881- - 1890 7,496
1891 -- 1900 9,627
1901 -- 1910 1,70,813
1911- - 1920 1,25,483
1921- - 1930 1,16,980
1931- - 1940 99,423
1941- - 1950 63,341
1951 - -1960 54,126
1961 -- 1970 32, 451
1971 -- 1980 19,362
1981 -- 1990 9,327
1991- - 2000 5,663
மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரத்து 313 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது.
________________________
* மாநில அரசு பொறுப்பேற்கும்
சயனைட் மண் கழிவு உள்ள பகுதியை மத்திய அரசு, மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு சொத்து வரி உட்பட பல வகையான வரி செலுத்த வேண்டி உள்ளது. சுரங்கம் மூடும் போது இருந்த வரி பாக்கி, தற்போது இரட்டிப்பாக உயர்ந்து உள்ளது. இந்த சயனைட் மண்ணில், என்னென்ன கனிமங்கள் உள்ளன என தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஏற்கனவே சென்னை -- பெங்களூரு எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தொழிற் பூங்காவும் அமைய உள்ளது. இதனுடன் சயனைட் மண்ணில் உள்ள தங்கம் பிரித்தெடுக்கப்படும். இதன் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.
- ரூபகலா, காங்., - எம்.எல்.ஏ.,
தங்கவயல் தொகுதி
-----------------
* தனியார் முயற்சி தோல்வி
தங்கச் சுரங்கம் இயங்கும் போது, படிப்படியாக வங்கியில் வாங்கிய கடன் 5,00,000,00 ரூபாய். இது வட்டியுடன் சேர்த்து, 232 கோடி ரூபாயாக அதிகரித்தது. விற்பனை வரியாக 1.49 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். மாநில அரசுக்கு, 'அக்ரமா சக்ரமா' திட்டத்தில் வரி பாக்கி 19 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. பெஸ்காம் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி தொகை, 9,00,000,00 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. தங்கச் சுரங்கத்தை மீண்டும் இயக்க வாய்ப்பே இல்லை.
ஒரு டன் சயனைட் மண்ணில், 0.7 கிராம் தங்கம் கிடைப்பதாக தொழில் நுட்ப ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள தொழில் நுட்ப கூடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. சுரங்கத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
-- நன்மதி செல்வன், ஓய்வு பெற்ற ஸ்பெஷல் ஆபீசர், பி.ஜி.எம்.எல்.,
***
---------------
* சயனைட் மலை உள்ள 13 இடங்கள்
மைசூரு சுரங்கம் -- சாம்பியன் இணைந்த தெற்கு பகுதி, வடக்கு பகுதி
சாம்பியன் ரயில் நிலைய கிழக்கு பகுதி
பழைய கார்பென்டர் லைன் அருகில்
வடக்கு கிப்பர்ட்ஸ் ஷாப்ட் அருகில்
சாம்பியன் டி.ஏ.ஆர்.எப்., அருகில்
ரோவ்ஸ் ஷாப்ட் வட கிழக்கு பகுதி
ஓக்லிஸ் ஷாப்ட் கிழக்கு பகுதி, வடக்கு பகுதி
உரிகம் மெயின் ஷாப்ட் கிழக்கு பகுதி
கென்னடிஸ் அருகில்
எஸ்.டி., பிளாக் அருகில்
புதிய பாலக்காடு ஷாப்ட்
இந்த பகுதிகளில், 31.860 மில்லியன் டன் மண் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்.
**
- நமது நிருபர் -*