ADDED : ஜூலை 08, 2024 06:46 AM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், கைதாகி சிறையில் அடைபட்டுள்ள நடிகர் தர்ஷன் உடல் எடை குறைவதால், சிறை அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.
தன் காதலி பவித்ரா கவுடாவுக்கு, சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததால், நடிகர் தர்ஷன், அவரை கொன்றார். தற்போது பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.
தன்னை ஜாமினில் எடுக்கும்படி, சிறையில் இருந்தே சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் சிறை அதிகாரிகளுக்கு, புதிய தலைவலி துவங்கியுள்ளது. தர்ஷன் சிறைக்கு வந்த போது, அவரது உடல் எடை 107 கிலோ இருந்தது. ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைந்து, 97 கிலோவுக்கு வந்துள்ளார். சிறையில் அளிக்கப்படும் உணவு, மன அழுத்தம் போன்ற காரணங்களால், அவரது எடை குறைந்திருக்கலாம்.
அதி வேகமாக உடல் குறைவதால், அவரது உடல் ஆரோக்கியம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் சிறை அதிகாரிகள் கவலையில் உள்ளனர். தர்ஷனின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கின்றனர்.