பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவருக்கு சரமாரி அடி
பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவருக்கு சரமாரி அடி
பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவருக்கு சரமாரி அடி
ADDED : ஜூன் 13, 2024 01:43 AM

பெலகாவி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஷாகிர் முகமது, பெலகாவி நீதிமன்றத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதால், அங்கிருந்தோர் அவரை சரமாரியாக தாக்கினர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு நடந்த மங்களூரு இரட்டை கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஷாகிர் முகமது, 38, பெலகாவி ஹிண்டல்கா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
மிரட்டல்
இவர், கடந்தாண்டு ஜனவரி 14 மற்றும் மார்ச் 21ம் தேதிகளில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, சிறையில் இருந்தபடி மொபைல் போனில் பேசி, 'எனக்கு 10 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன்' என, மிரட்டல் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மஹாராஷ்டிரா போலீசார், ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாகிர் முகமதுவை, அம்மாநிலத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், ஷாகித்துக்கு, பயங்கரவாதி அப்சர் பாஷாவுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில், 2018 ஏப்., 21ல், அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்தவரும், தற்போது மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஏ.டி.ஜி.பி.,யாக உள்ள அலோக் குமாருக்கும், ஷாகித் முகமது கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக, நேற்று பெலகாவி மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு ஷாகித்தை போலீசார் அழைத்து வந்தனர். நீதிமன்ற வளாகத்தில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என ஷாகித் கோஷம் எழுப்பினார்.
பரபரப்பு
இதனால், ஆவேசமான அங்கிருந்த பொது மக்கள், வழக்கறிஞர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். போலீசார், அவரை மீட்டு அழைத்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
இது தொடர்பாக, பெலகாவி டி.சி., ரோகன் ஜெகதீஷ் கூறுகையில், ''ஷாகித் முகமது, தட்சிண கன்னடா மாவட்டம், குண்டையா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜெயேஷ் காந்த் பூஜாரி. தன் 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
''கேரள மாநிலம் மலப்புரம் சென்று, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். பெயரையும் ஷாகிர் முகமது என்று மாற்றிக் கொண்டார். பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியது தொடர்பாக அவரிடம் மேலும் விசாரிக்க, நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளோம்,'' என்றார்.