நாகரஹொளே புலிகள் காப்பகம் பெயரில் போலி இணையதளம்
நாகரஹொளே புலிகள் காப்பகம் பெயரில் போலி இணையதளம்
நாகரஹொளே புலிகள் காப்பகம் பெயரில் போலி இணையதளம்
ADDED : ஜூன் 16, 2024 07:15 AM
மைசூரு: மைசூரில் வனத்துறை பெயரில் போலி இணையதளத்தை, சைபர் கிரைம் குற்றவாளிகள் மீண்டும் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில், மைசூரு மாவட்டம் நாகரஹொளே புலிகள் காப்பகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இங்கு புலிகள் சபாரி செய்ய விரும்புவோர், சமூக வலைதளத்தில் பதிவு செய்ய விரும்புவர். 'நாகரஹொளே புலிகள் காப்பகம் யானைகள், புலிகள் மற்றும் பிற விலங்குகளின் படங்களுடன் ஒரு தனி இணையதளம்' தென்படுகிறது.
இந்த இணையதளத்தில், சுற்றுலா செல்வோர் விபரத்தை முன்பதிவு செய்வர். அப்போது முன்பதிவு செய்யப்பட்டதற்கான அத்தாட்சி தகவல் கிடைக்கும்.
இதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பின், எந்த தகவலும், முன்பதிவு செய்வோருக்கு வருவதில்லை. அவர்களும், தாங்கள் முன்பதிவு செய்துவிட்டோமே என்ற மகிழ்ச்சியுடன் நாகரஹொளே செல்வர்.
அங்கு சென்ற பின்னரே, 'முன்பதிவு செய்யப்படவில்லை' என்பது தெரிய வருகிறது. அப்போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை சுற்றுலா பயணியர் உணர்கின்றனர்.
இதுதொடர்பாக, வனத்துறை நிர்வாகத்திடம், பலர், ஜனவரி மாதத்திலேயே புகார் அளித்தனர். இதனால், உஷாரான சைபர் குற்றவாளிகள், சில நாட்கள் அமைதியாக இருந்தனர். தற்போது மீண்டும் தங்கள் வேலையை காட்ட துவங்கி உள்ளனர்.
இதை உணர்ந்த வனத்துறையினர், 'சபாரி ஆர்வலர்கள், சுற்றுலா பயணியர், வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.nagaraholetigerreserve.com முன்பதிவு செய்ய வேண்டும் அல்லது நேரில் வந்து டிக்கெட் வாங்குங்கள்' என அறிவித்துள்ளனர்.