Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டாக்டர் மீதான கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு

டாக்டர் மீதான கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு

டாக்டர் மீதான கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு

டாக்டர் மீதான கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு

ADDED : ஜூன் 16, 2024 07:15 AM


Google News
பெங்களூரு: நெஞ்சுவலி சிகிச்சைக்காக வந்த, பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, டாக்டர் மீது பதிவான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய, கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பெங்களூரு ஜே.பி., நகர் ஜரகனஹள்ளியில் 45 வயது டாக்டர், கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 21ம் தேதி, 35 வயது பெண், நெஞ்சுவலி சிகிச்சைக்காக கிளினிக் சென்றார்.

சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது பெண்ணுக்கு, டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் அங்கிருந்து சென்றார். டாக்டர் மீது புட்டேனஹள்ளி போலீசில் புகார் செய்தார். டாக்டர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை


தன் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டாக்டர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி நாக பிரசன்னா விசாரித்து வந்தார்.

நேற்று முன்தினம் மனு மீதான விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், ''எனது மனுதாரர் டாக்டர். அவரது கடமையை மட்டுமே செய்தார். அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது. இதனால் அவர் மீதான, கிரிமினல் வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி கூறியதாவது:

டாக்டர் மீது நோயாளி வைத்திருக்கும் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்தால், டாக்டர்- - நோயாளி இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும். நோயாளியின் உடலை பரிசோதிக்க, மருத்துவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை வேறு எந்த உணர்ச்சிகளுக்கும் பயன்படுத்த முடியாது.

உதவி நாடும் நோயாளிகள்


தங்களது உதவியை நாடியே நோயாளிகள் வருகின்றனர் என்பதை, மருத்துவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நோயாளிகளின் சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. பெண் நோயாளியை, ஆண் டாக்டர் உடல் பரிசோதனை செய்யும்போது, இன்னொரு பெண் டாக்டர் இருப்பது அவசியம்.

ஆனால் இந்த வழக்கில் பெண் டாக்டர் இல்லை. இங்கு தேவையற்ற மற்றும் வெளிப்படையான பாலியல் துாண்டுதல் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் டாக்டர் மீது பதிவான, கிரிமினல் வழக்கை ரத்து செய்ய முடியாது.

இவ்வாறு அவர்கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us