அலுவலகங்களில் பணியமர்த்தல் கடந்த டிசம்பரில் 16% வீழ்ச்சி
அலுவலகங்களில் பணியமர்த்தல் கடந்த டிசம்பரில் 16% வீழ்ச்சி
அலுவலகங்களில் பணியமர்த்தல் கடந்த டிசம்பரில் 16% வீழ்ச்சி
ADDED : ஜன 11, 2024 12:01 AM

புதுடில்லி:தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பிற துறைகளில், கடந்த டிசம்பரில் அலுவலக பணிக்கான பணியமர்த்தல், 16 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு நிறுவனமான 'நவுக்ரி ஜாப் ஸ்பீக்' வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவித்திருப்பதாவது:
தகவல் தொழில்நுட்பம், பி.பி.ஓ., கல்வி, சில்லரை வர்த்தகம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான பணியாட்கள் தேர்வுகள், உலக நிலவரத்தை முன்னிட்டு எச்சரிக்கை உணர்வுடன் மேற்கொண்டதையடுத்து, அலுவலக பணியாளர் பணியமர்வு, முந்தைய ஆண்டை விட, கடந்த மாதம் 16 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த மாதமான நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிசம்பரில், தகவல் தொழில்நுட்பத் துறை அல்லாத பிற துறைகளில் பணியமர்த்தல் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், தகவல் தொழில்நுட்பத் துறையானது குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் புதிய வேலைவாய்ப்புகள் பிரமாதமாக இல்லாவிட்டாலும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த நிலையே நீடித்தது.
இதற்கிடையே, விருந்தோம்பல் துறையானது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், பணியமர்த்தல் 4 சதவீத அதிகரிப்புடன் வளர்ச்சி கண்டுள்ளது.
மருந்து பொருள் தயாரிப்பு துறைக்கான வேலைவாய்ப்பு, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
மெட்ரோ நகரங்களை விட, மெட்ரோ அல்லாத நகரங்களில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.