உள்நாட்டில் மின்சார கார் தயாரிப்பு; விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
உள்நாட்டில் மின்சார கார் தயாரிப்பு; விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
உள்நாட்டில் மின்சார கார் தயாரிப்பு; விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
ADDED : ஜூன் 03, 2025 02:10 AM

புதுடில்லி: இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை, மத்திய அரசு, கடந்தாண்டு மார்ச் 15ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், இத்திட்டத்துக்கான விரிவான வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு மையங்கள் அமைக்க குறைந்தபட்சம் 4,150 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 8,000 கார்கள் வரை, 15 சதவீதம் என்ற குறைவான வரி விகிதத்தில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படும். தற்போது இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கு 70 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.
அடுத்த இரண்டு வாரத்துக்குள் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கும் என்றும்; விண்ணப்பிப்பதற்கு 4 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், இந்த தொகை திருப்பி வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக 6,484 கோடி ரூபாய் வரை வரிச் சலுகை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, புதிய தயாரிப்பு ஆலை, இயந்திரங்கள், உபகரணங்கள், பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளுக்கு, திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.