நிறுவனங்கள் தரச்சான்று பெற ரூ.10 லட்சம் அரசு நிதியுதவி
நிறுவனங்கள் தரச்சான்று பெற ரூ.10 லட்சம் அரசு நிதியுதவி
நிறுவனங்கள் தரச்சான்று பெற ரூ.10 லட்சம் அரசு நிதியுதவி
ADDED : ஜன 06, 2024 10:14 PM

சென்னை:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் சர்வதேச தரச்சான்று பெற, தமிழக அரசு, 10 லட்சம் ரூபாய் வரை நிதி வழங்குகிறது.
ஒரு பொருளின் நம்பகத் தன்மை, நீடித்த உழைப்பு, செயல் திறனை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வசதியாக, அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்று நிறுவனங்கள், தரச்சான்றிதழ்களை வழங்குகின்றன.
அதன்படி, தரமான பொருட்களை உருவாக்குவதை உறுதி செய்ய, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று, நல்ல உற்பத்தி நடைமுறைகளுக்கு, ஜி.எம்.பி., சான்று, பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தரச்சான்று, 'செட்' எனப்படும் பூஜ்ஜிய குறைபாடு மற்றும் பூஜ்ஜிய விளைவு சான்று உட்பட, பல்வேறு தரச்சான்றுகள் வழங்கப்படுகின்றன.
இந்த தரச்சான்றுகளை பெற, நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். சிறு நிறுவனங்களின் முதலீடு ஏற்கனவே குறைவாக இருப்பதால், அவை சான்றிதழ் வாங்க சிரமப்படுகின்றன.
எனவே, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தொழில் வணிக ஆணையரகம், 'கியூ - செர்ட்' எனப்படும் தரச்சான்றிதழ் மானிய திட்டத்தின் கீழ், தரச்சான்று வாங்க நிதியுதவி செய்கிறது.
தேசிய தரச்சான்று பெறுவதற்கு அதிகபட்சம், 1 லட்சம் ரூபாய் வரையும்; சர்வதேச தரச்சான்று பெற அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக சிறு நிறுவனங்கள், சர்வதேச தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்தாலும், சில நிறுவனங்களே ஏற்றுமதி செய்கின்றன. சர்வதேச வணிகத்தில் ஈடுபடுவதற்கு தரச்சான்று அவசியம்.
எனவே, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் வகையில் நிறுவனங்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெற, நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இதை, தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.