வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
ADDED : ஜூலை 27, 2024 11:36 PM

சென்னை:வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், அதிக இளைஞர்கள் பயன் பெறும் வகையில், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை உத்தரவிட்டுள்ளது.
படித்து வேலையில்லாமல் ஏழ்மையில் உள்ள இளைஞர்கள், சுயதொழில் துவங்கி தொழில்முனைவேராக உருவெடுக்க, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
வர்த்தகம் சார்ந்த தொழில் துவங்க, திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கு மானியமாக, 25 சதவீதம் அல்லது அதிகபட்சம், 3.75 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு. பயனாளியின் குடும்ப ஆண்டு வருவான உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இந்த உச்சவரம்பு குறைவாக இருப்பதால், திட்டத்தில் பலர் பயன்பெற முடியவில்லை. எனவே, ஆண்டு வருமான உச்சவரம்பை உயர்த்துமாறு, அரசுக்கு கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து உச்சவரம்பு, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாக, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், சட்டசபையில் சமீபத்தில் அறிவித்தார்.
அதை செயல்படுத்தும் வகையில், உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி, அரசு உத்தரவிட்டுஉள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த 2023 - 24ல், 2,538 இளைஞர்கள் சுயதொழில் துவங்குவதற்காக, 28.14 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.
குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது