/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ ரூ.585 கோடிக்கு கடன் உத்தரவாதம் நிறுவனங்களுக்காக ஏற்றது அரசு ரூ.585 கோடிக்கு கடன் உத்தரவாதம் நிறுவனங்களுக்காக ஏற்றது அரசு
ரூ.585 கோடிக்கு கடன் உத்தரவாதம் நிறுவனங்களுக்காக ஏற்றது அரசு
ரூ.585 கோடிக்கு கடன் உத்தரவாதம் நிறுவனங்களுக்காக ஏற்றது அரசு
ரூ.585 கோடிக்கு கடன் உத்தரவாதம் நிறுவனங்களுக்காக ஏற்றது அரசு
ADDED : ஜூலை 18, 2024 11:53 PM

சென்னை:கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 39,000 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட கடனுக்காக 585 கோடி ரூபாயை, கடன் உத்தரவாதமாக தமிழக அரசு ஏற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வாகன உதிரிபாகம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றை வாங்கும் பொதுத்துறை மற்றும் பெரிய தனியார் நிறுவனங்கள் குறித்த காலத்தில் பணம் தருவதில்லை.
இதனால், மூலப்பொருட்கள் கொள்முதல் உள்ளிட்ட காரணங்களுக்காக, பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு நிதி நிறுவனங்களில் கடன் வாங்குகின்றன.
கேட்கும் தொகை முழுதும் கடனாக கிடைப்பதுஇல்லை. இதனால், இந்நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொகை கடனாக கிடைக்க, தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வசதியாக்கல் நிறுவனம், 2022ல் கடன் உத்தரவாத திட்டத்தை செயல்படுத்தியது.
இதற்காக, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு செய்யப்பட்டது.
உத்தரவாத திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு வழங்கப்படும் உத்தரவாதம், 75 சதவீதத்தில் இருந்து, 90 சதவீதமாகவும்; 40 லட்சம் ரூபாய் முதல், 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு உத்தரவாதம், 75 சதவீதத்தில் இருந்து, 80 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.
கூடுதல் உத்தரவாதத்தை அரசு ஏற்பதால், நிறுவனங்களுக்கு எளிதாக வங்கி கடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 39,000 தொழில்முனைவோர்களுக்கு, 5,900 கோடி ரூபாய் அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 585 கோடி ரூபாய்க்கான கடன் உத்தரவாதத்தை தமிழக அரசு ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.