Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

திண்ணை!

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
குஜராத் வித்தியா பீடத்தின் நிர்வாக சபைக் கூட்டத்தில், காந்திஜியும் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.

அவரை அழைத்து வர, வண்டி உரிய நேரத்திற்கு போய் சேரவில்லை.

வண்டி வராதது தெரிந்ததும், சபர்மதி ஆசிரமத்தில் இருந்து நடை பயணமாக புறப்பட்டு விட்டார், காந்திஜி.

ஆசிரமத்துக்கும், வித்தியா பீடத்துக்கும், அதிக துாரம். சாலையில் நடமாட்டம் இல்லை. அதனால், வண்டி கிடைக்கவும் வழி இல்லை.

கொஞ்ச துாரம் நடந்து போய் கொண்டிருந்த போது, கதர் ஆடை அணிந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், ஒருவர்.

அவரிடம், 'நான் வித்தியா பீடத்துக்கு போகணும். கொஞ்சம் சைக்கிளைத் தர்றீங்களா?' என கேட்டார், காந்திஜி.

உடனே சைக்கிளை கொடுத்தார், அவர்.

காந்திஜி, தென்னாப்ரிக்காவில் இருந்த காலத்தில், சைக்கிள் ஓட்டி பழக்கம். இந்தியாவில் அதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டதில்லை. தற்போது, அது கிடைக்கவே, சைக்கிளில், குறித்த நேரத்துக்கு கூட்டத்துக்கு வந்து சேர்ந்தார், காந்திஜி.

முழத்துண்டு அணிந்து, திறந்த உடம்போடு சைக்கிளில் ஏறி, சரியான நேரத்தில் வந்து சேர்ந்த, காந்திஜியை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

எஸ்.கே.கார்வேந்தன் எழுதிய, 'தமிழகத்தின் தியாகச் சுடர்கள்' நுாலிலிருந்து:

இந்திய அரசியல் நிர்ணய சபையில், நான்கு ஆண்டு, மக்களவையில் ஐந்து ஆண்டு, மாநில அரசில் 10 ஆண்டு என, பணம் கொழிக்கும் பல துறைகளில் அமைச்சராக இருந்தவர், பி.கக்கன். இறுதிவரை அவருக்கு சொந்தமாக வீடு மற்றும் கார் கிடையாது.

ராயப்பேட்டை, கிருட்டிணாபுரத்தில், சிறிய வாடகை வீட்டில் மாதம், 110 ரூபாய் செலுத்தி குடியிருந்தார். வெளியில் எங்கு சென்றாலும், பேருந்தில் தான் பயணித்தார்.

முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு, ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரள மாநிலம், கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்கு சென்றார், கக்கன். அங்கு சிகிச்சைக்காக அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்த முடியாததால், அங்கிருந்து வெளியேறி, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

அங்கு, முன்னாள் சட்டசபை உறுப்பினருக்கான 'சி' வார்டில் அனுமதிக்கப்பட்டார். அந்த வார்டில், எட்டு பேர் அனுமதிக்கப்படுவர். அதில், கட்டில், மெத்தை கிடையாது. ஒரு விரிப்பை தரையில் விரித்து படுக்க வேண்டும். எந்த ஒரு சிறப்பு வசதியும் கிடையாது.

அப்போது மருத்துவமனையில், சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த, மதுரை முத்துவை சந்திக்க, வந்திருந்தார், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.,

அவரை பார்த்து திரும்பும் போது, எதேச்சையாக அங்கு பாயில் படுத்திருந்த, கக்கனை பார்த்தார். உடன் வந்த காளிமுத்துவிடம் சந்தேகப்பட்டு, 'இவர் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் தானே...' என்று விசாரித்தார்.

காளிமுத்து, 'ஆம்...' என்றதும் பதறிப் போய், மருத்துவமனை டீனை அழைத்து, 'இவர் யார் என்று தெரியுமா?' என்று சத்தம் போட்டார்.

முதல்வர் உடனே நடவடிக்கை எடுத்து, கக்கனை, 'அ' பிரிவு சிறப்பு வார்டுக்கு மாற்றி, உயர்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் இலவச வீடும், பேருந்தில் செல்ல இலவச அனுமதி சீட்டும், மாதம் 500 ரூபாய் ஓய்வூதியமும் வழங்க ஆணை பிறப்பித்தார். அதற்கான உத்தரவை, சென்னையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில், ஜனவரி 16, 1979ல், வெள்ளிப் பேழையில் வைத்து, பி.கக்கனிடம் வழங்கினார், எம்.ஜி.ஆர்.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us