Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நண்பர்கள்!

நண்பர்கள்!

நண்பர்கள்!

நண்பர்கள்!

PUBLISHED ON : பிப் 24, 2024


Google News
Latest Tamil News
திருச்சுரம், அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவன் மதிவாணன், 6ம் வகுப்பு படித்து வந்தான். அவன் உடற்பயிற்சி ஆசிரியரை சந்தித்து, ''ஐயா... ஒரு மனிதருக்கு எத்தனை நண்பர்கள் தேவை...'' என்று கேட்டான்.

அதற்கு உடனே, பதில் அளிக்காமல் அருகில் நின்றிருந்த ஒரு மாமரத்தை சுட்டி காட்டி, ''அதோ... உயரமான கிளையில் காய்த்து தொங்கும் மாங்காயை பறித்து வா...'' என்றார் ஆசிரியர்.

''மாங்காய் உயரத்தில் இருக்கிறது; என் கைக்கு அது எட்டாது...''

''அப்படியானால், உன் நண்பர்களிடம் உதவி கேள்...''

நண்பன் ஒருவனை அழைத்து உதவ கேட்டான்.

அவன் மதிவாணனை துாக்கிப் பிடித்தான். ஆனால், கைக்கு மாங்காய் எட்டவில்லை.

மேலும், இரண்டு நண்பர்களை அழைத்து, முக்கோண வடிவில் நிற்க கூறி, அவர்களின் தோள்களில் ஏறி நின்று, மாங்காயை பறிக்க முயற்சித்தான். அப்போதும் எட்டவில்லை.

இன்னும் சிலரை அழைத்து வட்டமாக நிற்க வைத்து, அவர்களின் தோள்களில், மூன்று நண்பர்களை ஏறி நிற்க வைத்தான்; பின், அந்த மூவர் தோளில் ஏறி நின்று, மாங்காயை பறிக்க முயற்சித்தான். பறிக்க முடியவில்லை.

அதற்கு மேல் உதவிக்கு அழைக்க யாரும் அங்கு இல்லை.

உடனே ஆசிரியரிடம் வந்து, ''ஐயா... நண்பர்களின் உதவியை தேடிய பின் கூட மாங்காயை பறிக்க முடியவில்லை...'' என வருத்தத்துடன் கூறினான்.

''அப்படியானால், மாங்காயை பறிக்க, போதுமான நண்பர்கள் உன்னிடம் இல்லை என்று தானே அர்த்தம். நிறைய நண்பர்கள் இருந்திருந்தால் யாரேனும் ஒருவர், அந்த மாங்காயை பறிக்க, உயரமான ஏணி வேண்டும் என்ற ஆலோசனையை கூறியிருப்பர்...

''வாழ்நாளில், நல்ல நண்பர்களை சேர்த்து கொள்ள வேண்டும். அப்போது தான், நன்மை, தீமைகளை அறிந்து நடக்க முடியும்...'' என்றார் ஆசிரியர்.

அறிவுரைக்கு பின், மனம் தெளிவுற்றது.

பட்டூஸ்... நல்ல நட்புக்களின் வழிகாட்டுதலில், வாழ்வில் உயரங்களை அடைய முடியும்!

என்.ரமேஷ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us