
புகார் பெட்டி
ஆப்பூர் சாலையில் பள்ளம்
சீரமைக்க வேண்டுகோள்
மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை,சட்டமங்கலம் பகுதியில், சாலை நடுவே பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது.
இந்த பள்ளத்தில் சிக்கி, வாகனங்களின் டயர்கள் பஞ்சராகின்றன. எனவே, இந்த பள்ளத்தை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- த.சதீஷ், மறைமலை நகர்.
கூடுவாஞ்சேரி ரேஷன் கடையில்
பொருட்களின் தரம் கேள்விக்குறி
நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சி, ராணி அண்ணா நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், கூடுதலாக மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அங்கு வினியோகிக்கப்படும் மசாலா பாக்கெட்டுகள், ரவை உள்ளிட்ட பொருட்களுக்கு, தயாரிப்பு தேதி, முடிவு தேதி இல்லை. அதனால், பொருட்களின் தரம் குறித்து சந்தேகம் எழுகிறது.
இது குறித்து, ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு வந்ததை கொடுக்கிறோம் என, அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
எனவே, தயாரிப்பு தேதி மற்றும்காலாவதி தேதி குறிப்பிட்ட பொருட்களை மட்டும் ரேஷன் கடையில் வினியோகம் செய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதுமை அன்பழகன், நந்திவரம்.
கிளாம்பாக்கம் முனையத்தில்
மலிவு விலை உணவகம் தேவை
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில், குறைந்த விலையில் உணவளிக்கும் உணவகங்கள் இல்லை.
மேலும், அங்கு தற்போது செயல்படும் உணவகங்களில், காலை மற்றும் இரவு நேரங்களில், இட்லி வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, விலை அதிகமான காலை உணவு வகைகளே விற்கப்படுகின்றன.
அதே போல், மதியம் சாப்பாடு கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக, தக்காளி, லெமன், சாம்பார் சாதம் தான் கிடைக்கின்றன.
எனவே, இங்கு வரும் பயணியர் சாப்பிடுவதற்கு வசதியாக, குறைந்த விலையில் உணவளிக்கும் மலிவு விலை உணவகங்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கிருஷ்ணன், வேலுார்.
கூடுவாஞ்சேரி பகுதிகளில்
மின் தடையால் பாதிப்பு
கூடுவாஞ்சேரி அடுத்த அருள் நகர், கணபதி நகர், மாடம்பாக்கம், ஆதனுார், கண்ணதாசன் நகர் ஆகிய பகுதிகளில், தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது.
இதனால், இப்பகுதியில் வசிக்கும் பெரியவர்கள், குழந்தைகள், வீட்டில் இருக்கும் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக, மின் வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதிக்கு சீரான மின் வினியோகம் வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.மகாலட்சுமி, அருள் நகர்.
மாநில நெடுஞ்சாலை ஓரம்
மண் அணைக்க கோரிக்கை
பவுஞ்சூர் அடுத்த சித்ரவாடி கிராமத்தில், மதுராந்தகம் - கூவத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. தினசரி இருசக்கர வாகனம், கார், பேருந்து என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
அவுரிமேடு பேருந்து நிறுத்தம் அருகே, கடந்த ஆண்டு பருவமழையின் போது, சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து, சாலை ஓரத்தில் இருந்த மண் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துவிபத்துகுள்ளாகும் நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலையோர பள்ளத்தில் மண் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ.திவாகர், பவுஞ்சூர்.
திருக்கழுக்குன்றம் தெருவில்
வேகத்தடை அமைக்கப்படுமா?
திருக்கழுக்குன்றம் பெரிய தெருவில், வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த தெருவில், எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதில், வாகனங்கள் அத்துமீறி செல்வதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, இங்கு இரண்டு இடங்களில் வேகத்தடை அமைத்து, வாகனங்கள் சீராக செல்வதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- க.வேலன், திருக்கழுக்குன்றம்.