Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிட்டத்தட்ட 50 நாட்களாக தேர்தல் பிரசாரம் செய்து களைத்துப் போன அரசியல்வாதிகள், அவரவர் விருப்பத்திற்கேற்ப, சக்திக்கேற்ப ஓய்வெடுக்கின்றனர். சிலர் மலைவாச ஸ்தலங்களுக்குப் போகின்றனர்; சிலர் வெளிநாடுகளுக்குப் போகின்றனர்.

வெறும், 15 சதவீத ஓட்டை குறிவைத்து, 85 சதவீதத்தினரையும், அவர்களுடைய தெய்வங்களையும், நம்பிக்கைகளையும் நிந்தை செய்வது, அவமரியாதையாக பேசுவது, மத ரீதியாக இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் என்றெல்லாம் கூடப் பிரசாரங்கள் நடைபெற்று வந்தன.

ஆனால், ஒரே ஒரு கட்சி மட்டும், பிற கட்சிகளால் திரும்பத் திரும்ப அவமானப்படுத்தப்பட்டும், 80- - 85 சதவீத மக்களுக்கு ஆதரவாகவும், நம்பிக்கையாகவும் பேசி வந்துள்ளது. அவர்களின் 10 ஆண்டுகளின் செயல்பாடுகளும், இதை நிரூபிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

இந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரான பிரதமர் மோடி, கடுமையான தேர்தல் பிரசாரங்கள் செய்து முடித்த பின், ஒரு சாதாரண அரசியல்வாதியைப் போலல்லாமல், வித்தியாசமாக, அமைதியான சூழலில், நம் ரிஷிகள், முனிவர்கள் செய்ததைப் போன்று தியானம் செய்து, உடலுக்கும், உள்ளத்திற்கும் அமைதியையும், புத்துணர்ச்சியையும் பெறுகிறார்.

ஒவ்வொரு தேர்தல் பிரசார முடிவிலும் இதே போன்றே செய்து வருகிறார்.

இந்த முறை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தார். இதன் மூலம், தான் ஒரு சாதாரண, சராசரி அரசியல்வாதி அல்ல என்பதை மக்களுக்கு மீண்டும் உணர்த்தியுள்ளார்.

உண்மையில், சில இடங்களில் அவரே கூறியுள்ளதைப் போலவே, இவர் நம் நாட்டையும், நாட்டு மக்களையும், சனாதன தர்மத்தையும் அரக்கர்களிடமிருந்து காப்பாற்ற, அந்த இறைவனே அனுப்பி வைத்திருக்கிறானோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

இவரின் ஆதிக்கத்தை, வளர்ச்சியை, மக்கள் ஆதரவை, பொறுக்க இயலாத எதிர்க்கட்சிகள், இவரின் கன்னியாகுமரி தியானத்தைப் பற்றி தாறுமாறாகப் பேசி வருவது, வேதனையளிக்கிறது; வருத்தமாக உள்ளது. நம் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால், வேறு எப்படி பேச முடியும்!

இந்த நிலைப்பாடு, நம் வீட்டிற்குள்ளேயே நமக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களும் நம்மோடு வாழ்ந்து வருவதைப் போலுள்ளது. கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை?

கேள்விக்குறியாகி விட்டதே நம் நிலைமை?




என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காவிரி, பாலாறு, சிலந்தி ஆறுகளில் தடுப்பு அணைகள் கட்டும் விஷயம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த விவகாரத்தால், பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்கள், நம் முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டன.

கர்நாடக மாநிலத்திலும், தெலுங்கானா மாநிலத்திலும், காங்கிரஸ் ஆட்சி நடத்துவதால், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், கர்நாடக அரசுக்கும், தெலுங்கானா அரசுக்கும் எதிராக கண்டனத்தை தெரிவிக்க முடியவில்லை.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்தாலும், அக்கட்சியின் தமிழக தலைவர் முத்தரசன் மட்டுமே கேரள அரசுக்கு எதிராக குரல் கொடுத்துஇருக்கிறார்.

'இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினாலும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள அரசுகளின் அடாவடி போக்கை கண்டித்து, சட்டசபையில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர முடியவில்லை.

தடுப்பணைகள் கட்டி, தமிழர்களின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டாம் என்று அட்வைஸ் செய்து, கேரள முதல்வர் விஜயனுக்கு கடிதம் மட்டுமே எழுதி திருப்தி அடைகிறார் முதல்வர் ஸ்டாலின்.

உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் போன்றவை, காவிரி நதிநீர் பங்கீட்டு விஷயத்தில், தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்கினாலும், அதை எல்லாம் அலட்சியம் செய்து, கர்நாடக, ஆந்திர, கேரள அரசுகள், தமிழகத்திற்கு எதிராகத்தான் செயல்படுகின்றன.

முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னாலும், அதை உடைத்து புது அணை கட்டுவதில்தான் கேரள அரசு உறுதியாக இருக்கிறது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதிலும், கேரள அரசு இப்போது தீவிரமாக இருக்கிறது. ஆறுகளில் தமிழகத்திற்கு உரிய பங்கைப் பெறுவதற்கு, ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய பரிதாப நிலையில் தமிழகம் இருக்கிறது.

காமராஜர் ஆட்சியில் நதிநீர் பிரச்னை, இந்த அளவுக்கு மோசமாக இருந்தது இல்லை. அதற்கு காரணம், கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது.

இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி நடத்துவதால், நதிநீர் பிரச்னை, தீராத தலைவலியை உண்டு பண்ணி விட்டது.

நதிநீர் பிரச்னையில் தமிழகம் கையேந்தி பவனாக இருப்பதால் தான், தண்ணீர் பங்கீட்டுப் பிரச்னை இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து விட்டது.

எதிர்காலத்தில் குடிக்கக் கூட தமிழகத்திற்கு இந்த ஆறுகளில் தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி விட்டது.

மருத்துவமனையின் அலட்சியம்!


கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் திருச்சி அருகில் உள்ள மணப்பாறையில் உள்ள ஒரு மருத்துவமனையில், அறுவை சிகிச்சையின் போது ஒரு பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததாக நாளிதழ்களில் செய்தி வெளி வந்தது.

ஒரு மருத்துவர் சிகிச்சை அளிக்கும் போது ஒவ்வாமை காரணமாக நோயாளிக்கு பிரச்னைகள் வருவது சகஜமே. இந்த ஒவ்வாமையால், சில நோயாளிகள் இறந்து போவதும் உண்டு. இதற்காக மருத்துவர்களை குறை சொல்ல இயலாது. ஆனால், அறுவை சிகிச்சையின் போது இது போல துணியை வைத்து தைப்பது என்பது நிச்சயம் கவனக் குறைவும், அலட்சியமுமே தவிர வேறு இல்லை.

நாளேடுகளும் இது போன்ற செய்திகளை வெளியிடும் போது அந்த மருத்துவமனைகளின் பெயர்களை வெளியிடுவதில்லை. இது மருத்துவமனைகளின் நிர்ப்பந்தமா இல்லை, வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை.

தவறு செய்யும் மருத்துவமனைகளின் பெயர்களையும் வெளியிட்டால், எதிர்காலத்தில் அவை எச்சரிக்கையாக செயல்படும். நோயாளிகளும் சர்வ கவனத்துடன் இருப்பர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us