PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

'அரசியலை பொறுத்தவரை பொறுமை அவசியம்; அவசரப்படக் கூடாது...' என்கின்றனர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நில ஆக்கிரமிப்பு தொடர்பான பண மோசடி வழக்கில் சிக்கிய சோரன், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன், கட்சியின் மூத்த நிர்வாகியான சம்பாய் சோரனை முதல்வர்பதவியில் அமர்த்தி விட்டுச் சென்றார். ஹேமந்தின் ஜாமின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால், அவரது மனைவி கல்பனா களத்தில் இறங்கினார்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராவதற்கு கல்பனா காய் நகர்த்தினார். இதனால், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், அவருக்கு ஜால்ரா அடித்து, காரியம் சாதிக்க நினைத்தனர்.
மேலும் சிலரோ, 'கல்பனாவுக்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. ஹேமந்த், சிறையிலிருந்து வெளியில் வர வாய்ப்பு இல்லை. சம்பாய் சோரன் தான் நிரந்தர முதல்வர்...' என, அவருக்கு துதி பாடினர்.
யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹேமந்துக்கு ஜாமின் கிடைத்து விட்டது; மீண்டும் முதல்வராகி விட்டார். இதனால், கல்பனாவுக்கும், சம்பாய் சோரனுக்கும் ஜால்ரா அடித்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
'அவசரப்பட்டு உளறி விட்டோமோ... ஹேமந்த், இனி நம்மை நம்புவாரா. அவரது மனைவி கல்பனா நம்மை போட்டு கொடுத்து விடுவாரோ...' என, கலக்கத்தில் உள்ளனர்.