உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரைமணிநேரத்தில் முடிவான படம்... ஆர்ஜே பாலாஜியின் விஷன் தான் கருப்பு : சூர்யா பேச்சு

அரைமணிநேரத்தில் முடிவான படம்... ஆர்ஜே பாலாஜியின் விஷன் தான் கருப்பு : சூர்யா பேச்சு

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‛கருப்பு' படம் கடந்தவாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.207 கோடி வசூலை தாண்டி உள்ளது. சென்னையில் ரசிகர்களுக்கும், பத்திரிகையாளருக்கும் நன்றி தெரிவித்தார் சூர்யா. அவர் பேசியதாவது...

ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி அரைமணி நேரத்தில் முடிவு பண்ண படம் இது. முழுக்க முழுக்க ஆர்.ஜே.பாலாஜியோட விஷன். அவர் இந்த கதையை சொல்லும்போதே தியேட்டர்ல வேற மாதிரி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எல்லா முடிவுகளையும் சரியா எடுத்ததுக்கும், சரியா எடுக்க வச்ச கருப்பசாமிக்கு தான் நாங்க நன்றியை சொல்லணும். ஆசைப்பட்ட, ஆனால் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த மாதிரியான ஒரு ரியாக் ஷனை சமீபத்தில் தியேட்டரில் நான் பார்த்தது இல்லை.

இந்த படத்திற்கு பெரிய அன்பு கிடைத்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா அயர்லாந்து, நியூசிலாந்து என வெளிநாடுகளிலும் அதே ரியாக்ஷன் கிடைக்கும்போது ஒரு நல்ல படத்துல இருக்கோம் என தோணுது. இப்படி, அப்படி இருந்திருக்கலாம் என எல்லா படத்துக்கும் ஒரு விமர்சனம் இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு ஒரே மாதிரியான அன்பை சம்பாதித்து இருக்கும்போது அதற்காக நன்றி சொல்கிறேன்.

படத்தை தாண்டி கருப்பசாமிக்கு ஒரு பாட்டு வைங்க என என் உடன் இருக்கும் குமார் சொன்னார். அவர் சொன்ன ஐடியா தான் கிளைமாக்ஸ் பாடல். படம் எடிட் பண்ணி முடிச்சு ஐந்து மாதத்திற்கு பிறகு எடுத்தது தான் கருப்பு பாடல். இந்த படத்துக்கு சரியா என்னென்ன பண்ணணுமோ அது எல்லாத்தையுமே பண்ணிடலாம் அப்படின்னு அத்தனை பேரும் சேர்ந்து நினைச்சது வந்து, இன்னைக்கு இந்த சந்தோஷத்தை பார்க்க முடியுது. அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான் உண்மையான சந்தோஷம்.

குழந்தைகள் முதல் பெரியவங்க வரை தியேட்டர்ல அத்தனை பேரும் வந்து ஹவுஸ்புல் போர்டு எல்லாம் போட்டு போட்டோ காமிப்பது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இந்த படத்தை மக்கள்கிட்ட எடுத்துட்டு போன உங்க அத்தனை பேருக்கும் மறுபடியும் என் நன்றி.

இவ்வாறு சூர்யா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !