Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ராமநாம மகிமை

ராமநாம மகிமை

ராமநாம மகிமை

ராமநாம மகிமை

ADDED : ஜன 19, 2024 01:35 PM


Google News
Latest Tamil News
காஞ்சி மஹாபெரியவர் ராமநாம மகிமை குறித்து விளக்கினார்.

ராமரை பற்றி அறியாத பாமரன் ஒருவனுக்கு அவரது மகிமையை உபதேசித்தார் ஒரு ஞானி. 'ராம நாமம் விலை மதிப்பற்றது. அதை விற்று விடாதே; அதை அளவிட முடியாது. துாய்மையான மனதுடன் ஒருமுறை சொன்னாலும் நன்மை கிடைக்கும்' என்றார். அவனும் ஒருமுறை ஜபித்தான். காலம் ஓடியது. மரணத்தை தழுவினான். எமதுாதர்கள் அவனுடைய ஆத்மா(உயிர்)வை அழைத்துக் கொண்டு எமலோகம் சென்றனர்.

அவனது பாவ, புண்ணிய கணக்கை பரிசீலித்து விட்டு, 'ஞானியின் உபதேசத்தால் ஒருமுறை ராம நாமம் ஜபித்துள்ளாய். அதன் பலனாக நீ எது கேட்டாலும் தரத் தயாராக இருக்கிறேன்' என்றார் எமதர்மன். 'ராமநாமத்தை விற்காதே' என ஞானி சொன்னது நினைவுக்கு வர, எதையும் அவன் கேட்கவில்லை. 'நீங்கள் விரும்புவதை கொடுங்கள்' என்றான் பாமரன்.

ராமநாமத்தை எப்படி மதிப்பிடுவது என எமனுக்கு தெரியாததால், 'இந்திரனிடம் விசாரிக்கலாம்' என முடிவெடுத்தான். 'இந்திர லோகத்திற்கு பல்லக்கில் வருவேன். ராம நாமத்தின் மதிப்பு தெரியாத நீங்கள்தான் என்னைச் சுமக்க வேண்டும்' என்றான். 'பல்லக்கு சுமக்க சொல்கிறான் என்றால் இதுவும் ராமநாம மகிமைதான் போலும்' என எண்ணிய எமதர்மன் அவனைச் சுமந்து சென்றான். 'ராம நாமத்தின் மதிப்பை நானும் அறியவில்லை. பிரம்மாவிடம் ஆலோசிப்போம்'' என்ற இந்திரனும் பல்லக்கை சுமக்கவே, பிரம்ம லோகத்தை அடைந்தனர். 'ராம நாமத்தின் மகிமையை என்னாலும் மதிப்பிட முடியாது. வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவிடம் கேட்போம்' என்றார் பிரம்மா.

மகாவிஷ்ணுவை அணுக, ''சாதாரண மனிதனுக்காக எமதர்மனும், தேவலோக தலைவன் இந்திரனும், படைப்புக்கடவுள் பிரம்மாவும் பல்லக்கை சுமக்கிறார்கள் என்றால் ராமநாமத்தின் மகிமையை யாரால் அளவிட முடியும்?'' என்று சொல்லி அந்த உயிரைத் தன் திருவடியில் ஏற்றுக் கொண்டார் மகாவிஷ்ணு. இதுதான் ராமநாமத்தின் மகிமை'' என புன்னகைத்தார் மஹாபெரியவர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us