Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மருமகள் மகாலட்சுமி

மருமகள் மகாலட்சுமி

மருமகள் மகாலட்சுமி

மருமகள் மகாலட்சுமி

ADDED : அக் 25, 2024 08:21 AM


Google News
Latest Tamil News
ராஜஸ்தானில் ராவல் பிருத்விசிங் என்ற பண்ணையார் இருந்தார். பணக்காரர் என செருக்குடன் வாழ்ந்த இவர் மீது மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. இதன் காரணமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். இவரது மனைவி ரோகிணி மிகவும் புத்திசாலியானவள். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவள். ஏழ்மை அடைந்ததால் வெளியூரில் தஞ்சமடைந்தனர். அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடியேறினர். மீண்டும் செல்வத்தை அடைய வேண்டும் என காலை, மாலையில் விளக்கேற்றி துளசிமாடத்தில் வழிபட்டாள்.

ஒருநாள் வெள்ளி அன்று காலையில் துளசி மாடத்தைச் சுற்றும் போது பருந்து ஒன்று நாடாளும் அரசிக்கு சொந்தமான மாலையை விட்டுச் சென்றது. அதை அவள் பத்திரப்படுத்தி வைத்தாள். மாலை காணாமல் போனதை அறிந்த அரசர் வருந்தினார். பருந்து கொத்திச் சென்ற மாலையைக் கண்டுபிடித்து தருபவருக்கு பரிசளிப்பதாக அறிவித்தார். இதை கேள்விப்பட்ட பிருத்விசிங் தன் மனைவியிடம் சொல்ல, ரோகிணி பத்திரப்படுத்திய மாலையை எடுத்துக் காட்டினாள். அரசரிடம் மாலையை ஒப்படைத்த போது '' நீங்கள் என்ன கேட்டாலும் தருவேன்'' என்றார் அவர்.

''என் கோரிக்கையை நிறைவேற்றினால் போதும்'' என்றாள் ரோகிணி.

''என்ன வேண்டுமோ கேள்'' என்றார்.

'' தீபாவளியன்று அரண்மனை உட்பட எங்கும் விளக்கு ஏற்றக் கூடாது. ஆனால் எங்கள் குடிசையில் மட்டும் ஏற்ற அனுமதிக்க வேண்டும். விளக்கு ஏற்ற யாராவது ஆசைப்பட்டால் அவர்கள் எங்கள் வீட்டைச் சுற்றி ஏற்றிக் கொள்ள அனுமதிக்கலாம்'' என்றாள். அனைவரும் வாயடைத்து நின்றனர். மன்னரும் சம்மதித்தார்.

தீபாவளி நன்னாள் வந்தது! மாலையில் ரோகிணியின் குடிசையைச் சுற்றி விளக்கேற்றப்பட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமான குடிசையில் மட்டும் விளக்குகள் எரிவதை கண்ட மகாலட்சுமி அங்கு வந்தாள். வாசலில் நின்ற ரோகிணியோ மகாலட்சுமியை தடுத்தாள். ''ஐப்பசி அமாவாசையன்று விளக்கேற்றி இருக்கும் வீட்டிற்குள் நுழைவேன். இது என்னுடைய சத்தியவாக்கு. ஏன் தடுக்கிறாய்?'' எனக் கேட்டாள் மகாலட்சுமி.

''தாராளமாக வரலாம்... ஆனால் என் வீட்டுக்கு எப்படி வரப் போகிறாய்?'' எனக் கேட்டாள் ரோகிணி.

'' உன் மகளாக வருகிறேன்''

''மகளாக வந்தால் திருமணமானதும் புகுந்த வீட்டிற்கு போய் விடுவாய். அதனால் என் மருமகளாக வா' என நிர்பந்தம் செய்தாள் ரோகிணி.

எங்கும் விளக்கு எரியாததாலும், விளக்கு ஏற்றிய வீட்டில் நுழைந்தாக வேண்டும் என்பதாலும் ரோகிணியின் நிர்பந்தத்தை ஏற்றாள் மகாலட்சுமி. சாதுர்யமாக செயல்பட்ட ரோகிணியிடம், ''உன் மருமகளாகவே வருகிறேன். உன் வீட்டில் நிரந்தரமாக தங்குகிறேன்'' என வரம் கொடுத்தாள். ரோகிணி கணவருடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாள்.

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த கதை மக்கள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. தீபாவளியன்று வீடெங்கும் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வரவேற்போம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us