Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/அரிசோனா ஆறுமுகனுக்கு அரோகரா!

அரிசோனா ஆறுமுகனுக்கு அரோகரா!

அரிசோனா ஆறுமுகனுக்கு அரோகரா!

அரிசோனா ஆறுமுகனுக்கு அரோகரா!

ஜூன் 12, 2025


Google News
Latest Tamil News

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து சிதறிய ஆறு கனல் பொறிகளைத் தீக்கடவுளும், காற்றுக் கடவுளும் திருக்கயிலையிலிருந்து எடுத்துச் சென்று கங்கையின் சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கு கார்த்திகைப் பெண்களின் அன்பில் ஆறு குழந்தைகளாக வளர்ந்த குமரக் கடவுளை ஆரத் தழுவி, ஆறுமுகனாக்கி, அமரர் துயர் தீர்க்கத் தன் வலிமையை வேலாக ஈந்தனள், அன்னை பராசக்தி.



அந்த இனிய நாளான வைகாசித் திங்கள் விசாகப் பெருநாளை ஆறுமுகன் பிறந்தநாளாக அனைவரும் கொண்டாடுகிறார்கள்.



அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் அத்திருநாள் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டும் அதுபோலவே, அரக்கரின் கொடுமைபோலச் கடும் அரிசோனா வெய்யிலிலும், வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப் பட்டது.அடியவருக்கு அருட்பிரசாதமாக அளிக்கப்பட வேண்டி, ஆனைமுகன் ஆலயத்தோர் வாங்கிய நூற்றுக்கணக்கான ஆப்பிள்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை எடுத்து அனைத்தையும் குளிர்நீரில் கழுவி, அர்ப்பணிப்புக்காக எடுத்துவைத்தார், ஆர்வலர் சிவநேசன்.மகளிர் ஆர்வலர்கள்முருகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பிரசாதமும், இனிப்பும் வீட்டில் சமைத்துக் கொணர்ந்து சேர்த்தனர்.



வள்ளி, தெய்வானையுடன் இணைந்து நிற்கும் முருகனின் உற்சவத் திருமேனி நன்கு அலங்கரிக்கப்பட்டு மேடையில் அருள்பாலிக்கத் தொடங்கினார். கருவறையில் இருக்கும் மூலவர்கள் திருமேனிக்குப் புனித நீராட்டல் தொடங்கியது.



ஆலய அர்ச்சகர் வரப்பிரகாஷ் ஆசார்யுலுவுடன் சமய ஆரவலர்கள் ஸ்ரீபாஸ்கர், வைத்தியநாதன், சுப்பராமன், தீரஜ், ரவி ராஜகோபாலன், ரவி சோபல்லி ஆகியோர் வேதம் ஓதினர்.



மந்திரத்துடன் நீராட்டும் ஆலய அர்ச்சகர் ஜெயந்தீஸ்வர்ன் பட்டருக்கு ஆர்வலர் சஷாங்க் குமார் அருகிலிருந்து உதவினார். அரிசி மாவு, மஞ்சள், தேன், பால், தயிர், பழச்சாறு, இளநீர், பன்னீர், திருநீறு, சந்தனக் குழம்பு இவைகளுடன் புனித நீராட்டல் நிறைவு பெற்றது.மூலவர்கள் திருமேனி அலங்காரம் நடந்தவுடன் நட்சத்திரதீப ஆராதனை நடந்தது.



ஆலயத் திருப்பணிக்காக அனுதினமும் அயராது உழைத்துவரும் ஆர்வலர் ஸ்ரீனிவாச குப்தா கௌரவிக்கப்பட்டார்.



ஆறுமுகனின் ஆறுமுகங்களுக்கு ஐம்பது ஓதல்களாக மொத்தம் அறுமுக முன்னூறு (ஶண்முகத் த்ரிசதி) மலர் அர்ச்சனை ஆறு ஆர்வலர்களால் உற்சவத் திருமேனிகளுக்கும், மூலவர்களுக்கும் நடைபெற்றது. இந்தச் சிறப்பு ஆராதனைக்காகக் கிட்டத்தட்ட நாலாயிரம் உதிரிப்பூக்கள் தேவைப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்த தருவிக்கப்பட்ட மலர்கள்/மாலைகள் போதாது என்று, வீட்டில் மலர்ந்த மல்லிகைப்பூ மாலைகள், செம்பருத்தி, அரளி, ரோஜா இன்னும் பல மலர்களையும் ஆர்வலர்கள் தொடுத்து எடுத்து வந்தனர்.



நான்மறை ஓதலைத் தொடர்ந்து தேவாரம், திருப்புகழ் இவற்றை ஆலய அர்ச்சகர் ஜெயந்தீஸ்வரன், சமய ஆர்வலர் மகாதேவன் ஆகியோர் பக்தியுடன் ஓதினர். ஆர்வலர் சுந்தர் நிழற்படங்களாகப் பதிவேற்றினார்.



ஆறுமுகமான பொருளான முருகனுக்கு அருச்சிக்கப்பட்டு அவனால் அருளப்பட்ட மலர்களுடன், அவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்கள், பிரசாதங்கள் வந்திருந்த அடியவர்களுக்கு நல்லாசியாக வழங்கப்பட்டன.



- நமது செய்தியாளர் ஓரு அரிசோனன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us