Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ இளைஞர்கள் பக்தி இலக்கியம் படிக்க வேண்டும் சகலகலா பேராசிரியை சங்கீத்ராதா

இளைஞர்கள் பக்தி இலக்கியம் படிக்க வேண்டும் சகலகலா பேராசிரியை சங்கீத்ராதா

இளைஞர்கள் பக்தி இலக்கியம் படிக்க வேண்டும் சகலகலா பேராசிரியை சங்கீத்ராதா

இளைஞர்கள் பக்தி இலக்கியம் படிக்க வேண்டும் சகலகலா பேராசிரியை சங்கீத்ராதா

ADDED : செப் 14, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
' எ ழுத்து- சமூகத்தை சீர்திருத்தும் ஆயுதம். பக்தி- மனிதர்களை நெறிப்படுத்தும் சூத்திரம்' என்பர் தமிழ் அறிஞர்கள். அந்த சிந்தனையின் நீட்சியாக மனித குலத்தை பக்குவப்படுத்தும் பக்தி இலக்கியத்தின் தீவிர ஆர்வலர், பட்டிமன்றப் பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், தமிழ் வளர்க்கும் பேராசிரியர் என சகலகலா திறமைகளுடன் வலம் வருகிறார், மதுரை தியாகராஜர் கல்லுாரி பேராசிரியை சங்கீத்ராதா.

தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர் நம்மிடம்...

தேனி மாவட்டம் கம்பம் என் பூர்வீகம். அப்பா என்.எஸ்.கிருஷ்ணன், அம்மா சரஸ்வதி. இருவரும் ஆசிரியர்கள். பள்ளி படிப்பின் போதே அப்பா எழுதிக்கொடுத்ததை பேச்சு போட்டியில் பேசி பரிசு வெல்வேன். அந்த முதல் வெற்றி நான் வானில் பறப்பது போல் இருக்கும். 3ம் வகுப்பு படித்தபோது இலக்கிய மன்ற கூட்டங்களில் பேசும் அளவிற்கு என்னை அப்பா தயார்படுத்தினார். பேச்சு, இலக்கிய மன்றக் கூட்டங்களில் பேச தயாராகும்போது சிறுவயதில் எனக்கு வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

கல்லுாரியில் படிக்கும் போது அ.சா.ஞானசம்பந்தன், பேராசிரியர்கள் ம.திருமலை, இரா.மோகன், மு.மணிவேல் என அன்றைய காலகட்டத்தில் தமிழ் ஆர்வலர்களாக அறியப்பட்ட பேராசிரியர்கள் எனக்கு வழிகாட்டியாக அமைந்தனர். பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியனை நடுவராக கொண்ட பட்டிமன்றக் குழுவில் பிரதான பேச்சாளராக இருந்தேன். 500க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பேசியுள்ளேன். கம்பன் கழகம், திருவள்ளுவர் கழகம் என ஆன்மிகம் பரப்பும் மையங்கள், கோயில், தி ருவிழாக்கள் என 500க்கும் மேற்பட்ட ஆன்மிக சொற்பொழிவுகளில் பேசியுள்ளேன்.

இலக்கிய கூட்டங்கள், சொல்லரங்கம், கருத்தரங்குகள், இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், பெண்கள் மேம்பாடு, விழிப்புணர்வு தொடர்பான கவிதைகள் என தமிழும், எழுத்துமான பய ணம் என்னுள் பல ஆண்டுகளாக தொடர்கின்றன.

இதுவரை பக்தி, தமிழ் இலக்கியம் சார்ந்து திருமழிசையாழ்வாரின் திவ்ய பாசுரங்கள், வைணவத்தேன் துளிகள், பெரியாழ்வார், ஆழ்வார்களும் அவதாரங்களும், பேராசிரியர் திருமலையின் அணிந்துரைகள் மதிப்புரைகள், புதுக்கவிதை திறனாய்வு நுால் என 6 புத்தகங்கள் எழுதியுள்ளேன். தற்போது ஒரு புத்தகம் எழுதி வருகிறேன்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களுக்கு தீர்வாக, பக்தி இலக்கியங்கள் தற்போதைய இளைஞர்களுக்கு தேவையாக உள்ளது. பக்திக்கு மனிதர்களை நெறிப்படுத்தும் சக்தி உண்டு. இந்த சக்தியே குற்றங்களை குறைக்கும் ஆயுதம். அறிவியலை சொல்லிக்கொடுக்கும் போது ஆன்மிகத்தையும் போதிக்க வேண்டும். அப்போது தான் குற் றமில்லா சமுதாயம் உருவாகும்.

தமிழ் படியுங்கள் தாய் மொழியில் சிந்திப்பதால் படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். தமிழ் படித்தால் ஆசிரியராக செல்வதை தவிர வேலைவாய்ப்பு இல்லை என்ற காலம் போய் இன்று தமிழ் படித்தவர்கள் உலகளாவிய வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

தமிழ் பேராசிரியையாக இருப்பதால் என்னால், தமிழ் ஆளுமைகளை சந்திக்க வைப்பது, அவர்களின் உரைகளை கேட்க வைப்பது, பல்வேறு புத்தகத் திருவிழாக்களுக்கு மாணவர்களை அழைத்துசெல்வது போன்ற செயல்பாடுகளை தனிப்பட்ட முறையில் ஆர்வத்துடன் செய்கிறேன். இதன் மூலம் மாணவர்கள் வாசிப்பு திறன் மேம்படும். படிக்கும் பழக்கம் இருந்தால் போதும் நல்ல வேலை வாய்ப்புகளும் வந்து சேரும். எதிர்காலமும் சிறக்கும். ஒரு மாணவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வழிகாட்டுவதே சிறந்த ஆசிரியர். அந்த பணியை அர்ப்பணிப்புடன் செய்வதால் மனநிறைவுடன் உள்ளேன் என்கிறார் பேராசிரியை சங்கீத்ராதா.

இவரை 98659 95993ல் பாராட்டலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us