Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ நவீனாஸ்ரீயின் நம்பிக்கை

நவீனாஸ்ரீயின் நம்பிக்கை

நவீனாஸ்ரீயின் நம்பிக்கை

நவீனாஸ்ரீயின் நம்பிக்கை

ADDED : ஜூன் 07, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
எட்டாம் வகுப்பு வரை தமிழ் பேச தெரியாது. ஆனால் இன்று வானம் எட்டுமளவுக்கு தமிழில் பேசி அசத்துகிறார். தொகுப்பாளினியாக, செய்தி வாசிப்பவராக சாதித்தவர் நடிகையாகவும் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார். இது எப்படி சாத்தியமாயிற்று என்பது குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக தொகுப்பாளினி நவீனாஸ்ரீ மனம் திறந்ததாவது...

அரக்கோணம் அருகே அன்பதிகாரன்பேட்டை அருகிலுள்ள மாரிமங்கலம் குக்கிராமம் தான் சொந்த ஊர். பூர்வீகம் ஆந்திரா. எனக்கு தமிழ் சுத்தமாகவே தெரியாது. 8ம் வகுப்பு வரை சரியாக தமிழ் பேச மாட்டேன். அம்மா ஸ்ரீதேவி தான், தமிழாசிரியர் வெங்கடேஷ் மாஸ்டரிடம் என்னை தமிழில் தேர்ச்சி பெற்று பேச வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரிடம் தான் தமிழ் பயின்றேன். நானே நம்ப முடியாத அளவுக்கு பிளஸ் ௨ தமிழ் பாடத்தில் பொது தேர்வில் 191 மதிப்பெண் பெற்றேன். இப்ப எனக்கு தமிழ் அத்துப்பிடி.

பள்ளி கல்விக்கு பிறகு சென்னையில் கல்லுாரியில் பொறியியல் படித்தேன். ஆனால் அதில் என் மனம் முழுதும் லயிக்கவில்லை. கல்லுாரி காலங்களில் என்னிடம் அலைபேசி கூட இல்லை. நண்பர்களும் அவ்வளவாக இல்லை. வீட்டில் ஒரு நாள் டிவியில் நடிகை ஆலியா மானஷா பேட்டியை கவனித்தேன். எல்லோரது கவனத்தையும் ஈர்க்குமளவுக்கு உயர வேண்டும் என என்னை போலவே சாதாரண குடும்பத்தில் பிறந்தவராக இருந்து நடிகையான வரலாற்றை தெரிவித்தது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. நானும் அவரை போல எல்லோரும் கவனிக்கத்தக்கவராக ஆக நினைத்து அதற்கான முயற்சிகளில் இறங்க துவங்கினேன்.

டிவி, சினிமா என்றால் அம்மா சம்மதிக்க மாட்டார் என நினைத்து அவருக்கு தெரியாமலேயே அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கினேன். முதலில் எடை குறைக்க உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தியதுடன் அழகாக தெரிய என்பதற்காக பியூட்டி டிப்ஸ்களையும் பின்பற்றினேன்.

சென்னையில் ஆங்கரிங் தொடர்பான நேர்முகத்தேர்வில் பங்கேற்ற போது என்னை தேர்வு செய்யவில்லை. என்ன காரணம் என என்னை நானே தேற்றிக் கொண்டு தயார்படுத்தி வந்த போது தான் ஒரு தொலைக்காட்சியில் பணிபுரிய வாய்ப்பு கிட்டியது.

வழக்கமாக அந்த தொலைக்காட்சி நிறுவனரான நடிகர் விஜயகாந்த் அடிக்கடி நிறுவனத்திற்கு வந்து நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஊழியர்களுக்கு ஊக்கமளிப்பாராம். ஆனால் நான் பணியில் சேர்ந்த நேரம் அவர் உடல்நலக்குறைவால் வருவதை தவிர்த்திருந்தார். அவரை ஒருமுறை கூட நேரில் சந்திக்கவில்லையே என்ற ஏக்கம் இன்று வரை உண்டு.

நான் தொகுப்பாளினியானது அம்மாவுக்கு அதுவரை தெரியாது. பிறகு நானே அவர்களை அழைத்து தெரிவிக்கவும் சென்னைக்கு வந்து பார்த்து தெரிந்து கொண்டார். பல டிவி நிறுவனங்களில் ஆங்கரிங் செய்ய துவங்கினேன். செய்தி வாசிப்பாளராகவும் உயர்ந்தேன். சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

சில சினிமாக்களில் செய்தி வாசிப்பாளராகவே நடிக்க வைத்தனர். நல்ல கேரக்டர்கள் வந்தால் தொடரலாம் என முயற்சித்து வருகிறேன். எப்படியாவது நடிக்க வேண்டும் என்றால் பல பட வாய்ப்புகள் தயாராக உள்ளன.

ஆனால் மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களுக்காக யோசித்து தான் சீரியல் வாய்ப்புகளை கூட ஏற்று கொள்கிறேன். வயதும், வாய்ப்பும், காலமும் இருப்பதால் நிச்சயம் சின்னத்திரை, வெள்ளித்திரை உலகில் ஒரு ரவுண்ட் வருவேன் என்று நம்பிக்கையுடன் நம்மிடமிருந்து விடைபெற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us