/வாராவாரம்/விருந்தினர் பகுதி/லோகேஷ் வந்தார்... எழுத்துலகில் புது நடையாக!லோகேஷ் வந்தார்... எழுத்துலகில் புது நடையாக!
லோகேஷ் வந்தார்... எழுத்துலகில் புது நடையாக!
லோகேஷ் வந்தார்... எழுத்துலகில் புது நடையாக!
லோகேஷ் வந்தார்... எழுத்துலகில் புது நடையாக!

இந்த இளம் இன்ஜினியருக்கு இனிய தமிழ் எழுத்து வசமானது எப்படி?
நான் கல்லுாரியில் படிக்கும் போது கடைசி ஆண்டில் சிறிய அளவில் நாடகங்கள், கதைகள் எழுதி நண்பர்கள் நடித்தார்கள். பின்னர் சிறுகதைகள் எழுதி வலைப்பதிவாக வெளியிட்டேன். படிப்பு முடிந்து வேலை கிடைத்த பின்பு தான் எனது புத்தக வாசிப்பு தீவிரமானது. ஜெயமோகனின் 'வெண்கடல்' வாசித்தேன். அது எனக்குள் தாக்கம் ஏற்படுத்தியது. அப்போது தான் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களின் இணையத்தில் எழுதத்துவங்கியிருந்தார்கள். அவற்றையெல்லாம் படித்தேன்.
இன்றைய இளைஞர்கள் கதை நுால்கள் படிக்கிறார்களா?
படிக்கவில்லை என்று முற்றிலுமாக கூறமுடியாது. சிறிய சதவீதம் இளைஞர்கள் இணையத்திலும், நுால்களிலும் கதைகளை படிக்கிறார்கள். அப்படி படிப்பவர்கள் அதிதீவிர வாசிப்பாளர்களாக உள்ளனர்.
முன்னோடி எழுத்தாளர்களின் நடையில், உங்களுடைய மொழி நடை இல்லை. உங்கள் எழுத்திற்கு துாண்டுதல் யார்?
புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் கதைகள், ஜெயமோகன் கதைகள் படித்திருக்கிறேன். என் வீட்டிற்குள் நடப்பது, என்னைச்சுற்றி நடப்பது, நான் பார்த்த இடங்கள், சந்தித்த மனிதர்களை என் கதைகளில் சேர்க்கிறேன். சில நேரங்களில் கற்பனையும் சேரும். சகமனிதர்களின் அனுபவங்கள் என்பதை விட சக உயிரிகளின் அனுபவங்களை சேர்க்கிறேன். கடல், காற்று, மண், மலை, பூச்சிகள், நத்தை என உயிரிகள் எல்லாவற்றையும் கதைகளில் கலந்து வைப்பேன்.
விருது பெற்ற 'விஷ்ணு வந்தார்' நுாலில், ஒரு கதையில் அக்ரஹாரத்து பேச்சு மொழியும், இன்னொரு கதையில் மலைவாழ் மக்களின் பேச்சு மொழியும் இருக்கிறது. உங்கள் எழுத்துக்களை சில எழுத்தாளர்கள் போல, ஒரு வட்டார பேச்சு நடைக்குள் மட்டும் அடைத்து விட முடியவில்லை. இது எப்படி?
என்னிடம் இருப்பது பொதுவான பேச்சு மொழி. உங்களிடம் பேசும் போது நான் எந்த ஊர்க்காரன் என்று நீங்கள் அடையாளப்படுத்தி விட முடியாது. அதே நேரத்தில், கதைக்கு ஏற்றவாறு நான் சந்திக்கும் அந்த வட்டார மக்களின் பேச்சு மொழியை பயன்படுத்துகிறேன்.
முதல் நுாலில் சாகித்ய அகாடமி விருது பெற்றது குறித்து...
இணைய இதழ்களில் என் கதைகள் விரவிக்கிடந்தாலும் பலருக்கு என்னை தெரியாது. நான் அறியப்படாதவனாக தான் இருந்தேன். என் கதைகள் போலவே இதுவும் தன்னிச்சையாக நடந்தது போல தோன்றுகிறது. இந்த முறை தான் விண்ணப்பித்தேன். கிடைத்து விட்டது. எனக்கு என் மீது இருந்த நம்பிக்கையை விட, இந்த நுாலின் மீது நம்பிக்கை இருந்தது. இந்நுால் மறுக்க முடியாத பிரதி. போட்டிக்கு ஐந்நுாறு நுால்கள் வரும்; ஆனால் இந்த நுாலை ஒருமுறை படித்து விட்டால் துாக்கி போட்டு விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
எழுத்தாளராக வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
'எனக்கான நான்'- என்பதை என் எழுத்தில் கண்டுபிடித்திருக்கிறேன். என் பயத்தை, மகிழ்ச்சியை எழுத்தாக மாற்றி அதில் இருந்து மீள்கிறேன். காதலன்-காதலி- -பிரிவது--சேர்வது என்பது போன்ற 'பொது உண்மை' கதைகளில் இருந்து வேறுப்பட்டு என் சிந்தனையில், கற்பனையில் 'ஒரு தனித்த உண்மையை' சொல்ல விரும்புகிறேன். நீங்கள் முதலில் குறிப்பிட்டவாறு, அந்த குழந்தை கடலை பார்த்து பேசுவதை போல வேறு யாரும் கற்பனை செய்யாதவற்றை நான் தனித்த கற்பனையில் எழுத விரும்புகிறேன். யாரையும் தழுவி எழுதக்கூடாது என்று நினைக்கிறேன். எந்த சாயலும் கூடாது என்றே நினைக்கிறேன்.