
சங்கம் வளர்க்கும் புதுக்கோட்டை
எல்லா மாவட்டங்களிலும் தமிழ் சார்ந்த இலக்கிய சங்கங்கள் ஏதாவது கருத்தின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கும். உதாரணமாக திருக்குறள் பேரவை குறள் சார்ந்தும், கம்பராமாயணம் கம்பரை சார்ந்தும் இயங்குகிறது. தமிழ்கூறும் நல்லுலகில் இருக்கும் தமிழ் படிப்புகளை, அறிஞர்களை, கவிஞர்களை போற்றவும், முன்னெடுக்கவும் முதன்முறையாக 2023ல் ஆரம்பிக்கப்பட்டது புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம். நிறைய அமைப்புகள் இணைந்து செயல்பட்ட நிலையில், மொழிக்கான தேவை இருக்கிறது என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் மாதந்தோறும் இலக்கிய கூட்டம், பொங்கல் திருநாளில் தமிழர் திருநாளாக கொண்டாடுகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களை பங்கேற்க வைக்கிறோம். சிறப்பு படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள விருது வழங்குகிறோம். 10 சிறந்த படைப்புகளுக்கு இலக்கியவாதி சீனு.சின்னப்பா பெயரில் விருதுகள் வழங்கி வருகிறோம். விருதுக்கு நுால்களை தேர்வு செய்ய 50 பேர் குழு உள்ளது. அவர்கள் சிறுகதை, கவிதை என வகைப்படுத்தி பிரிப்பர். ஒவ்வொரு பிரிவுக்கும் 3 நடுவர் இருப்பர். தங்கள் பிரிவில் யார் உள்ளார்கள் என அவர்களுக்கே தெரியாமல் சிறந்த நுால்களை தேர்வு செய்வர்.
இளைப்பாற இலக்கியம்
கவியரங்கம், பள்ளி நிர்வாகம், தமிழ்ச்சங்கம் என நான் ஓடிக்கொண்டிருந்தாலும் நேர மேலாண்மை முக்கியம். நேர நிர்வாகத்தில் சிறந்தவராக இருந்தால் எல்லாவற்றிலும் சாதிக்கலாம். என்னை போன்றவர்கள் ஓய்வு நேரங்களில் இலக்கியத்தில் இளைப்பாறுவார்கள். கவிதை, படைப்புகளை படிக்கும்போது நாம் இன்னொரு உலகத்திற்குள் செல்வதை உணரமுடியும். அந்த உலகம் எவ்வளவு அழகு என உணர வைப்பது இலக்கியம்தான்.