PUBLISHED ON : மே 10, 2026

பெண்களை பிரத்யேகமாக பாதிக்கும் நோய் லுாபஸ். இது, ஆண்களுக்கு அரிதாகவே வரும். அதே நேரத்தில், பெண்களை விடவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
முடி உதிர்வது, காய்ச்சல், படபடப்பு, வாயின் மேல் அன்னத்தில் புண் வருவது, வெயிலில் போனால் தோல், முகம் சிவந்து போவது, கன்னத்தில் வண்ணத்துப் பூச்சி போன்ற தடிப்பு இவை எல்லாம் லுாபஸ் பாதிப்பின் அறிகுறிகள்.
இளம் பெண்களுக்கு மூட்டு வலியாக வரலாம். நான்கு வயது குழந்தையில் இருந்து யாருக்கும் வரலாம். மிக அதிகமாக பாதிப்பது, 20 - 40 வயதிற்குள் தான். தமிழில் இதற்கு செஞ்சரும பல்லுறுப்பு சிதைவு நோய் என்று பெயர்.
சர்க்கரை நோய் போன்று எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
சர்க்கரை நோயில் நீண்ட நாட்கள் கழித்தே சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். இதில், முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகங்கள் தான். சில பெண்களுக்கு வலிப்பு வரலாம்; நரம்பியல் பாதிப்புடன் மனநல பாதிப்பு, மனக் குழப்பங்கள் வரலாம். பகலில் துாக்கம் வரும்; இரவில் வராது.
காய்ச்சல், சோர்வு, படபடப்பு இவையும் அறிகுறிகள்.
மரபியல், சுற்றுச்சூழல் இரண்டும் தான் இதற்கு பிரதான காரணம். லுாபஸ் வரும் வாய்ப்பு இருந்தால், சூரிய ஒளி தோலில் படும் போது, அதிலிருந்து வரும் புற ஊதா கதிர்களால், சில வேதி மாற்றங்களை ஏற்படுத்தி, எதிர்ப்பு செல்கள் உருவாகும். அவை, நம் உடல் செல் களையே அழிக்கத் துவங்கும்.
லுாபஸ் பாதிப்பின் தன்மை, நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு கண் பார்வைகூட பறிபோகலாம்.
மாதவிடாய் நின்ற பின், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவாக இருப்பதால், இந்த பாதிப்பு வருவதில்லை. முறையான பரிசோதனை செய்து, லுாபஸ் என்று உறுதி செய்து, தொடர்ந்து மருந்து சாப்பிட்டால், இந்த பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கலாம். மருந்தை நிறுத்தினால், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வரலாம்.
லுாபஸ் பாதிப்பு இருப் பவர்கள், காலை 9:00 மணிக்கு மேல் மற்றும் மாலை 4:00 மணி வரை வெயிலில் போகக்கூடாது. டேபிள் விளக்கு, டியூப் லைட், மொபைல் போன், எல்.இ.டி., விளக்கு போன்ற புற ஊதா கதிர்கள் வெளிப்படும் விளக்குகளை தோலில் படும் விதமாக பயன்படுத்தக் கூடாது.
நேரடியாக லைட் வெளிச்சம் தோலில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மருந்து சாப்பிட்டு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, கர்ப்பம் தரிக்கலாம். பாதிப்பு இல்லாமல் குழந்தை பெற முடியும்.
ஆரம்ப கட்டத்தில் லுாபஸ் பாதித்தவர்களின் வாழ்நாள் 10 ஆண்டுகளாக இருந்தது. இன்று பல புதிய சிகிச்சைகளால், அனைவரையும் போன்று நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
புதிய மருந்து
தற்போது நடைமுறையில் உள்ள சிகிச்சைகள், நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதன் மூலம், லுாபசை கட்டுப்படுத்துகிறது.
ரத்த வெள்ளை அணுக்களில், பி செல் என்ற ஒரு வகை உண்டு. லுாபஸ் பாதிப்பிற்கு இவை பிரதான காரணம்.
கடந்த மார்ச் மாதம் நடைமுறைக்கு வந்துள்ள, 'அனிபுரோலுமாப்' என்ற மருந்து, நோயை உண்டாக்கும் பி செல்களை மட்டும் தாக்கி அழிக்கிறது.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது; பக்க விளைவுகள் கிடையாது.
சர்க்கரை நோய்க்கு இன்சுலினை நோயாளிகள் தாங்களே போட்டுக் கொள்வதைப் போன்று, இந்த புதிய மருந்தையும் டாக்டரின் பரிந்துரையின் பேரில், போட்டுக் கொள்ள முடியும். இதன் விலை தற்போது, சில ஆயிரம் ரூபாயாக உள்ளது. நாளடைவில் விலை குறையலாம்.
டாக்டர் டி,என், தமிழ்செல்வம்,
முன்னாள் துறை தலைவர்,
மூட்டு முடக்கவியல் துறை,
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை.
97894 81143
drtamilselvam@gmail.com
