Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

PUBLISHED ON : ஜூன் 01, 2025


Google News
Latest Tamil News
தந்தையை கோபமுற வைத்தும், பின் அவரை சமாதானம் செய்தும், 'தந்தை சொல்படியே பயணிப்பேன்' என்று சூளுரைத்தும் அரசியல் செய்து வரும் பா.ம.க., தலைவர் அன்புமணியிடம் பதில் கேட்கிறது தமிழகம்...

1. 'உங்கள் முகுந்தனுக்கு பதவி அறிவிக்கப்பட்ட நிகழ்வு, தற்போதைய நிகழ்வு எல்லாமும் 'குடும்ப அரசியல்' முத்திரை இன்றி, 'தந்தை - மகன் மனக்கசப்பு' நிகழ்வாக மாறியது தற்செயலானது' என்றால் சிரிப்பீர்கள்தானே?

2. கட்சியின் வளர்ச்சிக்காக உயிர் நீத்தவர்களை 'தியாகி' என்று பட்டம் தந்து கவுரவிக்கும் எந்தவொரு கட்சி தலைமையினது குடும்பத்திலும், 'தியாகி' எனும் அந்த கவுரவ பட்டம் பெறும் வகையில் யாரும் உயிர் துறப்பதில்லையே... ஏன்?

3. 'படிப்பும் வேலையும் அரசு தந்துவிட்டால் மதுக்கடைக்கு ஏன் போகப் போகிறது என் சமுதாயம்' என்பது உங்கள் கேள்வி; 'படித்தவனும், பணி செய்பவனும் மதுக்கடைக்கு செல்வதில்லை' என்று உங்களை நம்ப வைத்தது யார்?

4..பா.ம.க., தொண்டர்கள் அத்தனை பேரும் உங்கள் தொப்புள்கொடி உறவுகள் என்கிறீர்களே... எதிர்காலத்தில் இந்த தொப்புள் கொடி உறவில் ஒன்று தற்போதைய உங்களின் பதவியை நிரப்பும் வாய்ப்புண்டா?

5. பிற கட்சிகளின் உயர் பதவிகளில் ஜொலித்துக் கொண்டிருக்கும் வன்னியர் சமூகத்தினரை, 'நம் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்கிறேன்' எனச் சொல்லும் உங்களின் பின்னால் திரள விடாமல் தடுப்பது எது?

6. 'இனி வரும் காலம் நம் காலம்' என்று சமீபத்திய மேடைகளில் பலருக்கு நம்பிக்கை ஊட்டும் நீங்கள், '2026ல் பா.ம.க., தனித்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றும்' எனும் தன்னம்பிக்கை முழக்கத்தை தவிர்ப்பது ஏன்?

7. 'பாட்டாளி மக்கள் கட்சி ஜாதிக் கட்சி அல்ல' எனும் உங்கள் கருத்து உண்மையெனில் உங்கள் கட்சியில் உள்ள பிற சமூகத்தினருக்கு நீங்கள் கேட்கும் உள் இடஒதுக்கீட்டால் என்ன பயன்?

7½ 'திறமை'க்கு 'சமூகநீதி' தரும் மதிப்பெண்?




      Our Apps Available On




      Dinamalar

      Follow us