பிரச்னைக்கு காரணமே இவர்தான்... : மண்டலத்தலைவரை சிக்க வைத்த கமிஷனர்
பிரச்னைக்கு காரணமே இவர்தான்... : மண்டலத்தலைவரை சிக்க வைத்த கமிஷனர்
பிரச்னைக்கு காரணமே இவர்தான்... : மண்டலத்தலைவரை சிக்க வைத்த கமிஷனர்
ADDED : ஜூலை 13, 2011 01:36 AM
மதுரை : பொதுமக்கள் முன்னிலையில், கிழக்கு மண்டலத்தலைவர் குருசாமியை சுட்டிக்காட்டி, ''பிரச்னைக்கு காரணமே இவர் தான்...'' என, மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் குற்றம்சாட்டினார்.
மாநகராட்சி கிழக்கு மண்டலம் காமராஜர்புரத்தில், ஜனதா கூட்டுறவு மண்ணெண்ணெய் வினியோக கூடம் உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான 2,680 ச.அ., நிலத்தில் கூடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மீறி, 3,000 ச.அ.,நிலத்தை பயன்படுத்தி கூடம் அமைத்தனர். இதில், கிழக்கு மண்டலத்தலைவர் வி.கே.குருசாமியின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. மாநகராட்சி கொடுத்த இடத்தை விட, அதிகம் எடுத்ததால் நிர்வாகம் கோபமானது. பிரச்னையால், வினியோகக் கூடம் செயல்படவில்லை. அப்பகுதியினர் மண்ணெண்ணெய் பெற சிரமப்பட்டனர். அப்பகுதியினர் வைத்த கோரிக்கையை தொடர்ந்து, கமிஷனர் செபாஸ்டின், மேயர் தேன்மொழி நேற்று ஆய்வு செய்தனர். பொதுமக்களை திரட்டி, அங்கு வந்த கிழக்கு மண்டலத்தலைவர் குருசாமி(தி.மு.க.,) 'மண்ணெண்ணெய் வினியோக கூடத்தை செயல்படுத்துமாறு,' கமிஷனரிடம் கூறினார்.
உண்மை நிலை தெரிந்த கமிஷனர், ''என்னிடம் எதற்கு கேட்க சொல்றீங்க? இதற்கு காரணமே நீங்க தானே! ஒழுங்காக கட்டடம் கட்டியிருந்தால், பிரச்னையே இருந்திருக்காதே?''என்றார்.
''என்ன சார்... மக்கள் முன்னாடி, என்னை மாட்டி விடுறீங்க...'' என, குருசாமி பதிலுக்கு கேட்டார்.
''பிரச்னைக்கு உண்மையிலேயே நீங்க தானே காரணம்,''என, குற்றச்சாட்டில் உறுதியோடு இருந்தார்
கமிஷனர்.
பெண் ஒருவர், ''வெளி இடத்திற்கு மண்ணெண்ணெய் வாங்க சென்ற போது, 10 பவுன் செயினை பறிச்சுட்டாங்க,'' என்றார்.
''யார் பறித்ததுனு, கிழக்கு மண்டலத்தலைவருக்கு தெரியும்,'' என, அவரை கை கட்டினார் கமிஷனர்.
அதிர்ச்சியான கிழக்கு மண்டலத்தலைவர், ''சார்... என்ன இது, நீங்க இப்படி பேசுறீங்க...'' என்றார்.
''உங்க ஏரியாவில், உங்க ஆளுங்க தானே எடுத்துருப்பாங்க; உங்களுக்கு தெரியாமலா இருக்கும்...'' என, அடுத்த குற்றச்சாட்டை முன்வைக்க, குருசாமி செய்வதறியாமல் வாயடைத்து நின்றார்.
உதவிப்பொறியாளர் 'சஸ்பென்ட்'
மாநகராட்சி நிலம் அதிகம் பயன்படுத்த காரணமாக இருந்த, மாநகராட்சி உதவிப்பொறியாளர் காமராஜூவை தற்காலிக பணிநீக்கம் செய்ய, கமிஷனர் செபாஸ்டின் உத்தரவிட்டர். உத்தரவை உடனே செயல்படுத்துமாறு, அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். பொதுமக்கள் நலன்கருதி, 'மண்ணெண்ணெய் வினியோக கூடம் செயல்பட,' அனுமதி வழங்கப்பட்டது.