காட்டுமிராண்டித்தனமாக நடக்காதீர்கள் : கலெக்டர் மணிமேகலை ஆவேசம்
காட்டுமிராண்டித்தனமாக நடக்காதீர்கள் : கலெக்டர் மணிமேகலை ஆவேசம்
காட்டுமிராண்டித்தனமாக நடக்காதீர்கள் : கலெக்டர் மணிமேகலை ஆவேசம்
ADDED : ஆக 09, 2011 12:03 AM
திண்டிவனம் : காரை வழி மறித்த கிராம மக்களை, காட்டுமிராண்டித்தனமாக நடக்காதீர்கள் என, கலெக்டர் எச்சரித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கருவம்பாக்கம் கிராமத்தில் நேற்று காலை நடந்த கிராம சபா கூட்டத்தில், கலெக்டர் மணிமேகலை கலந்து கொண்டார். தமிழக அரசின் இலவச கறவை மாடு திட்டம் குறித்து, கிராமப் பெண்களிடம் விவரித்தார். அப்போது இளைஞர்கள் சிலர், தங்கள் கிராமத்தில் மயானப் பாதை இடத்தைப் பார்வையிட வேண்டுமென கோரினர். கலெக்டரும் வருவதாக ஒப்புக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின், 15 பேர் கும்பலாகச் சேர்ந்து கலெக்டர் காரின் முன்னர் நின்று முற்றுகையிட்டனர். உடனே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் கடுப்பான கலெக்டர், மயானத்தைப் பார்வையிடாமல் சென்றுவிட்டார். அவர் 2 கி.மீ., தூரத்தில் உள்ள கோவிந்தாபுரம் கிராம சத்துணவுக் கூடத்தைப் பார்வையிட்டு விட்டு, மீண்டும் கருவம்பாக்கம் கிராமம் வந்தார். அங்குள்ள மயானத்தைப் பார்வையிட்டு, மயானப் பாதை வழியை ஏற்படுத்தக் கூறினார். பின்னர் அவர் கிராம மக்களிடம் ஆவேசமாக பேசியதாவது: நீங்கள் காட்டுமிராண்டித்தனமாக நடக்கக்கூடாது. உங்கள் குறைகளை அதிகாரிகளிடம் கூறினால் நடவடிக்கை எடுப்பர். அப்படி இருக்க, என் காரை மறிக்கும் காட்டுமிராண்டி செயலில் இறங்கினீர்கள். நான் பார்க்கிறேன் என்று கூறியும், இப்படி செய்தால் என்ன அர்த்தம்? நான் கீழே இருந்து இந்தப் பதவிக்கு மேலே வந்தவள். என்னிடம் இதுபோல் எல்லாம் நடக்கக் கூடாது.
இவ்வாறு கலெக்டர் ஆவேசமாக பேசினார். உடனே, கிராம பெரியவர்கள் சிலர், இளைஞர்கள் தெரியாமல் செய்து விட்டனர்; தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறினர். அதன் பின், கலெக்டர் சமாதானம் அடைந்தார்.


