Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சக்சேனா மீது ஆந்திர தயாரிப்பாளர் புகார்

சக்சேனா மீது ஆந்திர தயாரிப்பாளர் புகார்

சக்சேனா மீது ஆந்திர தயாரிப்பாளர் புகார்

சக்சேனா மீது ஆந்திர தயாரிப்பாளர் புகார்

ADDED : செப் 13, 2011 07:00 PM


Google News
சென்னை: ஒப்பந்தப்படி பணத்தைத் தராததுடன், பேரிழப்பையும் ஏற்படுத்தி, மோசடி செய்து மிரட்டியதாக 'சன் பிக்சர்ஸ்' சக்சேனா மீது, ஆந்திர படத் தயாரிப்பாளர் மன்மோகன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். ஆந்திர மாநிலம், ஐதராபாத் மாவட்டம், பன்ஜாரா ஹில்ஸ், எம்.எல்.ஏ., காலனியைச் சேர்ந்தவர் சல்லா மன்மோகன்; பினாக்கிள் பிக்சர்ஸ் பிரைவேட் லிட் என்ற பெயரில், தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த அவர், 'சன் பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி சக்சேனா மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2008ம்ஆண்டு, கோழிக்கோட்டைச் சேர்ந்த திவ்யா பிக்சர்ஸ் உரிமையாளர் ரவி என்னுடைய அலுவலகத்திற்கு வந்து, நான் தயாரித்து இயக்கிய, 'போலீஸ் போலீஸ்' என்ற படத்தின் தமிழ் உரிமையை வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்தார். இதன் படி, சென்னைக்கு வந்த நான், ராயப்பேட்டையில் உள்ள கிரீன் ஆப்பிள் புரொடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் முகமது சாதிக்கை சந்தித்தேன். இவர்கள் இருவரும், என்னை 'சன் நெட்ஒர்க்' அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, 'சன் பிக்சர்ஸ்' சக்சேனாவை அறிமுகப்படுத்தி வைத்தனர். அப்போது, 'போலீஸ் போலீஸ்' படத்தின் தமிழ்ப் பதிப்பான 'குற்றப் பிரிவு' (இடம் வலம்) படத்தை, 2.1 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால், ஒப்பந்தம் போடும்போது, கோழிக்கோட்டில் உள்ள திவ்யா பிக்சர்ஸ் உரிமையாளர் ரவியின் மனைவி உமா ரவி பெயரில் ஒப்பந்தம் போட வற்புறுத்தினர். இறுதியில், 10 லட்ச ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். மீதமுள்ள 2 கோடி ரூபாயை தராமல் இழுத்தடித்தனர். அதன் பின், மீண்டும் 10 லட்ச ரூபாயை ரவி மூலம் சக்சேனா கொடுத்தார். தொடர்ந்து, தெலுங்கில் அந்தப் படத்தை வெளியிடுவதில் பிரச்னை ஏற்பட்டது. சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பிற்கு வரவழைத்து மிரட்டினர். அதன் பின், மினிமம் கேரண்டி அடிப்படையில், ஒப்பந்தம் போடப்பட்டது. அந்தத் தொகையையும் தரவில்லை. சாட்டிலைட் உரிமம் வழங்கியதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதற்காக அவர்கள் வழங்கிய செக்குகள் பணமில்லாமல் திரும்பின. இது தொடர்பாக, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து, கடந்த இரண்டாண்டுகளாக, கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், மிரட்டலுக்கும் உள்ளானேன். எனது தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டது. இவை அனைத்திற்கும், சக்சேனா தான் காரணம். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us