தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவராக சிங்காரவேலு நியமனம்
தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவராக சிங்காரவேலு நியமனம்
தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவராக சிங்காரவேலு நியமனம்
ADDED : ஆக 09, 2011 02:28 AM
சென்னை : தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழு தலைவராக, ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி சிங்காரவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், நேற்று தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.முந்தைய ஆட்சியில், தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக தனி சட்டம் கொண்டு வரப்பட்டு, அதனடிப்படையில் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக, ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி கோவிந்தராஜன் இருந்தார். அவர் நிர்ணயித்த கட்டணம் மிகவும் குறைவாக இருந்ததால், பள்ளிகள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோவிந்தராஜன் ராஜினாமா செய்தார். அதன் பின், கடந்த நவம்பரில் ரவிராஜ பாண்டியன், புதிய தலைவராக பொறுப்பேற்றார். இவர், மேல்முறையீடு செய்த 6,500 பள்ளிகளின் நிர்வாகிகளையும் அழைத்து, பள்ளிகளின் வரவு - செலவு மற்றும் எதிர்பார்க்கும் புதிய கட்டண விவரங்களை கேட்டறிந்தார். ஆறு மாதங்களாக இந்தப் பணிகள் நடந்தன. சமீபத்தில், புதிய கட்டணம் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், ரவிராஜ பாண்டியனும் ராஜினாமா செய்தார். குழுத் தலைவரை நியமிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள், புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என, ஐகோர்ட் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி சிங்காரவேலுவை, கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக நியமனம் செய்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர், நேற்று காலை, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.


