Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பெங்களூரு - நாகர்கோவில் தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை

பெங்களூரு - நாகர்கோவில் தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை

பெங்களூரு - நாகர்கோவில் தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை

பெங்களூரு - நாகர்கோவில் தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை

ADDED : ஆக 19, 2011 11:13 PM


Google News
சென்னை:பெங்களூரிலிருந்து நாகர்கோவிலுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, நாஞ்சில் கிறிஸ்தவ சங்கம் மனு அளித்துள்ளது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர். மேலும், நாகர்கோவில், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெங்களூருவில் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட உயர்கல்வி பயின்று வருகின்றனர். இவர்களைத் தவிர, வியாபாரம் சம்பந்தமாக, சொந்த அலுவல் என தினசரி, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ்கள் மூலம் பெங்களூருவுக்கு சென்று வருகின்றனர்.

பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், தென்மாவட்டங்களுக்கு வந்து செல்ல, தினசரி ரயில் இல்லாமல் அவதிப்படுகின்றனர். வயதானவர்கள், நோயாளிகள் பஸ்சில் பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.பொதுமக்கள் வசதிக்காக, நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூரு சென்று வர, தினசரி ரயில் இயக்க வேண்டும் என கடந்த, 15 ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுக்கிறது.

அதே சமயம், கடந்த 2003ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, இந்த வழித்தடத்தில், சிறப்பு ரயிலை இயக்கி லாபம் சம்பாதித்தது. ஆனால், தினசரி ரயில் இயக்குவதற்காத எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, நாஞ்சில் கிறிஸ்துவ சங்கம், மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் நாகர்கோவில் - பெங்களூரு தினசரி ரயிலை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவிற்கு மட்டும் ஒரு புதிய ரயில் இயக்கப்படும் அறிவிப்பு வருகிறது. இது ரயில்வே துறை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதை காட்டுகிறது.

தற்போது, நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில், பகலில் இயக்கப்படுவதாலும், வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படுவதாலும், தென்மாவட்ட மக்களுக்கு அதிகம் பலனளிக்கவில்லை.

மேலும், கன்னியாகுமரியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ரயில், திருவனந்தபுரம், பாலக்காடு, கோவை வழியாக சுற்றிச் செல்வதால், பயண நேரம் 21 மணி நேரமாகிறது. இதனால், கூடுதல் நேரமும், அதிக பணமும் விரயமாகிறது. அதே சமயம், நாகர்கோவிலில் இருந்து மதுரை, ஓசூர் வழியாக 14 மணி நேரத்தில் பெங்களூரு செல்ல முடியும்.

எனவே, பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு, மதுரை வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us