தேர்வு விடுமுறைக்கு 65 சிறப்பு பஸ்கள்
தேர்வு விடுமுறைக்கு 65 சிறப்பு பஸ்கள்
தேர்வு விடுமுறைக்கு 65 சிறப்பு பஸ்கள்
ADDED : அக் 03, 2011 03:16 AM
ஈரோடு: ஈரோட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல, அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் (ஈரோடு) சார்பில், 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
இந்த சிறப்பு பஸ்கள் நேற்று துவங்கி, அக்டோபர் 9ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. தேர்வு முடிந்ததை அடுத்து, தேர்வு விடுமுறை விடப்பட்டு, மீண்டும் பள்ளிகள் அனைத்தும், அக்டோபர் 10ம் தேதி திறக்கப்படவுள்ளது. தவிர, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வரும் 5, 6ம் தேதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு, விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்பவர்கள், தங்கள் குடும்பத்துடன், சொந்த ஊர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், ரயில், பஸ், டிராவல்ஸ் ஆகியவற்றில் கடுமையான கூட்டம் காணப்படும். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் விதமாக, அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் ( ஈரோடு) சார்பில், சென்னை, மதுரை, திருச்சி, திருச்செந்தூர், கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கு 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தவிர, மக்கள் கூட்டத்தை பொருத்து, அவர்களின் வசதிக்காக கூடுதல் டிரிப்புகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தடப்பள்ளி, அரக்கன்கோட்டை 2ம் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
கோபிசெட்டிபாளையம்: தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்தில் 2ம் போகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபியை அடுத்த கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் முதல்போக சாகுபடிக்காக ஏப்ரல் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 24 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையை போக்க நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை பணி நடப்பதால், விரைவாக அறுவடை பணிகள் முடிந்துள்ளது. கோபி பகுதியில் ஒன்பது கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இரண்டாம் போக சாகுபடிக்காக தடப்பள்ளி வாய்க்காலில் விநாடிக்கு 200 கன அடியும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் 150 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்தில் மீண்டும் நெல் நடவுக்கு விவசாயிகள் தயாராகின்றனர்.
பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கூகலூர் பகுதியில் மட்டும் சிறிதளவு நெல் அறுவடை பணி நடக்கிறது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை முதல் பகுதியில் நெல் அறுவடை பணி முடிந்து விட்டதால், இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் இரண்டாம் போகத்துக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


