இலங்கை முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு ஊழல் வழக்கில் சிறை
இலங்கை முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு ஊழல் வழக்கில் சிறை
இலங்கை முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு ஊழல் வழக்கில் சிறை
ADDED : மே 30, 2025 01:52 AM

கொழும்பு: இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தல் ஊழல் தொடர்பான வழக்கில், அந்நாட்டு முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2015ல் நம் அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன் வாக்காளர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டன.
மொத்தம் 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 செஸ் போர்டுகள் வாங்கப்பட்டன.
இதனால், இலங்கை அரசுக்கு ஒன்றரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
விளையாட்டு உபகரணங்களை கொள்முதல் செய்த மொத்த விற்பனை நிறுவனத்திற்கு, நளின் பெர்னான்டோ என்பவர் அப்போது தலைவராக இருந்தார். விளையாட்டு துறை அமைச்சராக மஹிந்தானந்த அலுத்கமகே பதவி வகித்தார்.
இவர்கள் செய்த ஊழல் காரணமாகவே அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, 2019ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு, தொழில்நுட்ப சிக்கல் காரணமாக கடந்த 2022ல் திரும்பப் பெறப்பட்டது.
இதற்கிடையே, கடந்தாண்டு அதிபராக பொறுப்பேற்ற அநுர குமார திசநாயகே, முந்தைய அரசின் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இதையடுத்து, விளையாட்டு உபகரணங்கள் வாங்கிய ஊழல் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.
விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அதில், ஊழலுக்கு முக்கிய காரணமாக இருந்த நளின் பெர்னான்டோவிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், அப்போது, விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
நளின் பெர்னான் டோவும், ஏற்கனவே வர்த்தக அமைச்சராக பதவி வகித்தவர்.