ராணுவம், மீடியா துறைகளில் இணைந்து செயல்பட இந்தியா - மங்கோலியா நாடுகள் இடையே ஒப்பந்தம்
ராணுவம், மீடியா துறைகளில் இணைந்து செயல்பட இந்தியா - மங்கோலியா நாடுகள் இடையே ஒப்பந்தம்
ராணுவம், மீடியா துறைகளில் இணைந்து செயல்பட இந்தியா - மங்கோலியா நாடுகள் இடையே ஒப்பந்தம்

உலான்படார் : இந்தியா-மங்கோலியா நாடுகளுக்கு இடையே, ராணுவம், மீடியா, திட்டக் கமிஷன் ஆகிய துறைகள் தொடர்பான விஷயங்களில், ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது.
ஜனாதிபதி பிரதிபாவுக்கும், மங்கோலிய ஜனாதிபதி ட்சாகியா எல்பெக்டோர்ஜிக்கும் இடையே, மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின. ராணுவ ரீதியில் ஒருங்கிணைந்து செயல்படுவது, மீடியா பரிமாற்றம், இரு நாட்டு திட்டக் கமிஷன்களுக்கு இடையே ஒருங்கிணைந்து செயல்படுவது, ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மேலும், தகவல் தொழில் நுட்பம், கல்வி, மற்றும் அவுட்சோர்சிங் மையங்களை, மங்கோலியாவில் அமைப்பதற்காக, அந்த நாட்டுக்கு கடன் வழங்கவும், இந்தியா முன்வந்துள்ளது.
மங்கோலிய ஜனாதிபதி எல்பெக்டோர்ஜியுடனான சந்திப்புக்குப் பின், ஜனாதிபதி பிரதிபா கூறியதாவது: கடந்த 2009ல், மங்கோலிய ஜனாதிபதி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, தற்போது நான், மங்கோலியாவுக்கு வந்துள்ளேன். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது தான், என் வருகையின் நோக்கம்.
திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவது தொடர்பாக, இரு நாட்டு திட்டக் கமிஷன்களுக்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விஷயங்களில், இந்தியாவுக்கு கிடைத்த அனுபவம், மங்கோலியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பில், முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறித்தும், பேச்சு நடத்தினோம்.
மீடியா துறையில், ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி, ஏராளமான பத்திரிகையாளர்கள், மங்கோலியாவில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து, மங்கோலியாவுக்கும் செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிரதிபா கூறினார்.


