Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செங்கல் சூளைக்கு மரங்கள் வெட்டுவது அதிகரிப்பு கிராமங்களின் இயற்கை சூழலுக்கு ஆபத்து

செங்கல் சூளைக்கு மரங்கள் வெட்டுவது அதிகரிப்பு கிராமங்களின் இயற்கை சூழலுக்கு ஆபத்து

செங்கல் சூளைக்கு மரங்கள் வெட்டுவது அதிகரிப்பு கிராமங்களின் இயற்கை சூழலுக்கு ஆபத்து

செங்கல் சூளைக்கு மரங்கள் வெட்டுவது அதிகரிப்பு கிராமங்களின் இயற்கை சூழலுக்கு ஆபத்து

ADDED : ஜூலை 19, 2011 12:20 AM


Google News

தியாகதுருகம் : செங்கல் தயாரிப்பு பணிக்காக மரங்களை வெட்டுவது சமீப காலமாக அதிகரித்து வருவதால் கிராமப் புறங்களில் அரசு இடத்தில் உள்ள மரங் களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல் தயாரிப்பு தொழில் என்பது தற்போது நல்ல வருவாய் ஈட்டித்தரும் நம்பகமான தொழிலாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு செங்கல் விலை உச்சத்தை தொட்டதை தொடர்ந்து பல விவசாய நிலங்களிலும் செங்கல் உற்பத்தி செய்து பலரும் லாபம் ஈட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் எங்கு திரும்பினாலும் முறையான அனுமதி பெறாத பல செங்கல் சூளைகளை காண முடிகிறது. சாதாரணமாக 3 ரூபாய் விலைக்கு விற்கப்பட்ட ஒரு செங்கல் 8 ரூபாய் வரை விலை உயர்ந்தது. இந்த விலைகொடுத்தும் பல இடங்களில் செங்கல் கிடைக்காமல் ஏக கிராய்க்கி ஏற்பட்டது. சிறுக சிறுக பணம் சேர்த்து வீடுகட்டும் பணியை துவக்கிய நடுத்தரவர்கத்தினர் விழிபிதுங்கி நின்றனர். பலர் வீடுகட்டும் பணியை பாதியில் நிறுத்தினர். செங்கல் விலை உயர்ந்ததால் அதை சார்ந்துள்ள மணல், ஜல்லி, மரம் உள்ளிட்ட பொருட்களும் விலை உயர்ந்தது. செங்கல் தயாரிக்கும் கூலியாட்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டதால் ஒப்பந்த அடிப்படையில் பெரும் தொகையை முன்பணமாக பெற்ற பின்னரே வேலைக்கு ஆட்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. எவ்வளவு கூலி கொடுத்தாவது ஆட்களை பணியமர்த்தி இரவு பகலாக பல இடங்களில் செங்கல் தயாரிப்பு பணிகளை தீவிரமாக்கி பலரும் இரட்டிப்பு லாபம் சம்பாதித்தனர். தற்போது செங்கல் விலை இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாலும் செங்கல் தயாரிப்பு லாபம் தரும் தொழிலாகவே இருந்து வருகிறது. செங்கல் தயாரிப்பில் முக்கிய பிரச்னையாக இருப்பது அவைகளை சுடுவதற்கு பயன்படும் மரங்களாகும். பெரும்பாலும் கிராமப்புறங்களில் வயல் ஓரங்களிலும், ஓடை, தரிசு நிலங்களில் வளர்ந்திருக்கும் விறகிற்காக பயன்படும் மரங்களை செங்கல் சூளைக்கு அதிகம் பயன்படுத்துவது வழக்கம். ஒரே சமயத்தில் பலரும் செங்கல் சூளை வைக்க துவங்கியதால் விறகுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அரசு புறம் போக்கு நிலங்களில் வளர்ந்துள்ள மரங்களையும் முறைகேடாக வெட்டி பயன்படுத்துவது அதிகரித்தது. சில இடங்களில் ஒப்புக்காக ஒரு சிறிய தொகையை அரசுக்கு செலுத்தி கணக்கு காட்டிவிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் 'அபேஸ்' செய்யப்பட்டது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏரிக்கரைகள், அரசு தரிசு நிலங்களில் வளர்ந்திருந்த மரங்கள் அடியோடு மொட்டை அடிக்கப்பட்டு வருகிறது. விறகிற்காக பயன்படுத்தும் மரங்கள் போதாமல் பல வகையிலும் பலன் தரக் கூடிய பனை, தென்னை உள்ளிட்ட மரங்களையும் அழித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் மரங்கள் சூழ்ந்த கிராமங்கள் என்பது மாறி வெறு மையாக காட்சியளிக்கும் நிலை விரைவில் உருவாக வாய்ப்புள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் 'ஆஷ்பிரிக்ஸ்' செங்கல் பயன் படுத்தி வீடுகட்டும் முறையை ஊக்குவித்தால் சூளைகளில் தயாரிக்கும் செங்கலுக்கு கிராக்கி குறைந்து அதன் உற்பத்திக்காக மரங்கள் வெட்டப்படுவது குறைய வாய்ப்புள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us