Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் : முதல்வர் ஜெ., தகவல்

ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் : முதல்வர் ஜெ., தகவல்

ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் : முதல்வர் ஜெ., தகவல்

ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் : முதல்வர் ஜெ., தகவல்

ADDED : ஆக 19, 2011 09:17 PM


Google News
Latest Tamil News

சென்னை : ''தற்போதுள்ள ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, 2012-13ம் ஆண்டில், மின்னணு ரேஷன் கார்டுகள் (ஸ்மார்ட் கார்டுகள்) வழங்கப்படும்'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

உணவு மற்றும் கூட்டுறவுத் துறைக்கான மானியத்தின் மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : ஒருபக்கம் போலி ரேஷன் கார்டுகள் உள்ளன. மற்றொரு பக்கம், ஏராளமானோர், கார்டுகள் கிடைக்காமல் உள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ரேஷன் கார்டுகள், சென்னையில் அச்சிட்டு வழங்கப்படுவதால், அவை கிடைக்க தாமதமாகிறது. இதற்குப் பதிலாக, அந்தந்த வட்டார அளவிலேயே ரேஷன் கார்டுகளை அச்சிட்டுக் கொடுக்க வேண்டும்.

அமைச்சர் புத்திசந்திரன் : அனைத்து வட்ட வழங்கல் அலுவலக அளவில், ரேஷன் கார்டுகள் அச்சிடப்படுகின்றன.

முதல்வர் ஜெயலலிதா : ரேஷன் கார்டுகள் பற்றி, உணவுத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகிறது. தற்போது குடும்ப அட்டைகள் வழங்கும் முறையில், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயரைப் பதிவு செய்தால், அதைக் கண்டுபிடிக்க வழிவகை இல்லை.

இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், குடும்ப அட்டைகளில் ஒரே நபர் பெயர் இடம் பெறும் நிலையும், போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையும் உள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளுக்கு பொருள் பெற வராத குடும்ப அட்டைகளுக்கும், கடைப் பணியாளர்கள் போலி பட்டியலிடும் நிலை உள்ளது.

இப்பிரச்னையைக் களைய, தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, உடற்கூறு பதிவு முறையில், மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பு, மக்களின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண் பாவையை பதிவு செய்து, பிரத்யேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி, மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொகுப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் பதிவு செய்யும் நிலை மற்றும் போலி குடும்ப அட்டைகள் வழங்குதல் போன்றவை களையப்படும்.

மேலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பட்டியலிட முடியும். போலி பட்டியலிடுவது களையப்படும். எனவே, தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us