ஜெ.,வை சந்திக்க தயக்கம் இல்லை: வைகோ
ஜெ.,வை சந்திக்க தயக்கம் இல்லை: வைகோ
ஜெ.,வை சந்திக்க தயக்கம் இல்லை: வைகோ
ADDED : ஆக 26, 2011 11:22 PM

வேலூர்: ''ராஜிவ் கொலையாளிகள் மரண தண்டனையை ரத்து செய்வது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச எனக்கு தயக்கமில்லை,'' என, வைகோ கூறினார். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போட உத்தரவிடப்பட்டுள்ளது. ம.தி.மு.க., பொது செயலளார் வைகோ நேற்று மதியம் 2. 55 மணிக்கு வேலூர் மத்திய சிறையில் மூவரையும் சந்தித்துப் பேசினார். இவருடன் ம.தி.மு.க., வக்கீல் நன்மாறன் சென்றார்.
பின்னர் 3.45 மணிக்கு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மத்திய சிறையில், 13 ஆண்டுகள் மரண கொட்டடையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனுக்களை மத்திய அரசும், ஜனாதிபதியும் நிராகரித்துள்ளனர். மத்திய அரசின் முடிவைத்தான் ஜனாதிபதியின் கருணை மனு புறக்கணிப்பில் பிரதிபலிக்கின்றது. இதன் மூலம் மூவரின் மரண தண்டனை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில், மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு வேலூர் சிறை அதிகாரிகளுக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விபரம் மூவருக்கும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு மூவரும் மனம் உடைந்து விடவில்லை. மூன்று பேரும் தங்கள் உயிர் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மூவருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட விஷயம் வெளியானதும் தமிழக மக்களும், உலகத்தில் உள்ள தமிழக மக்களும் கவலையில் உள்ளனர். முன்பு கேரள மாநில முதல்வராக நம்பூதரிபாடு இருந்த போது, பாலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கில் போடும் தேதியும் அறிவிக்கப்பட்டது. அப்போது நம்பூதரி பாடும், அவரது அமைச்சர் கிருஷ்ணையர் மத்திய அரசிடம், 'மரண தண்டனையை ரத்து செய்ய மாநில அரசுக்கும் உரிமை உள்ளது. எனவே மத்திய அரசு பாலன் மரண தண்டனையை ரத்து செய்யாவிட்டால், நாங்கள் ரத்து செய்வோம்' என, அழுத்தமாக தெரிவித்தனர். அதன் பின்னர் பாலன் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. அதே போல தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மூவர் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். கடந்த 1995க்குப் பின், 16 ஆண்டு தமிழகத்தில் யாரையும் தூக்கில் போடவில்லை. தமிழக அரசு மூன்று பேரின் உயிரை பறித்து விடாமல் இந்த நேரத்திலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மூவருக்கும் கருணை காட்டி மரண தண்டனையை ரத்து செய்து, தங்கள் உயிரை காப்பாற்றுவார் என, மூவரும் நம்புகின்றனர். மரண தண்டனைகளுக்கு எதிராக போராடி வரும் வக்கீல் ராஜ் ஜெத்மாலனி, கான்சால் காலின், வாகிந் சவுத்திலி ஆகியோர் மூவர் மரண தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆஜராகி வாதாட போகின்றனர். மூன்றாவது முறையாக வேலூர் சிறைவாசலில் இருந்து மூன்று பேரின் உயிரை காப்பாற்றும்படி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச எனக்கு தயக்கமில்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ம.தி.மு.க., மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன் உடனிருந்தார்.


